2012 காமன்வெல்த் தொடரில் தங்களை ஸ்லோ பீல்டர்கள் என்று தோனி மீடியாவில் கூறியது பற்றி, தங்களிடம் அவர் கலந்து ஆலோசிக்கவில்லை என்று ஷேவாக் கூறியுள்ளார்.
cricbuzz இணையதளத்திற்கு பேட்டியளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் விரேந்திர ஷேவாக், சமீபத்தில் ரிஷப் பண்ட் அணியில் இருந்து கழற்றி விடப்படுவதை விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து ரிஷப் சொதப்பி வரும் நிலையில், அவருக்கு பதிலாக கே.எல். ராகுல் விக்கெட் கீப்பிங் செய்கிறார். இந்த நிலையில், ரிஷப்புக்கு வாய்ப்பு கொடுத்தால்தான் அவரின் திறமை தெரியவரும் என்று ஷேவாக் கூறியுள்ளார். ரிஷப் பண்ட்டிற்கு அவரது நிலை குறித்து அணி நிர்வாகம் தெளிவுபடுத்தவில்லை என்றால் அது தவறானது எனக் கூறியுள்ளார். அத்துடன், சச்சின், காம்பீர் மற்றும் தன்னை தோனி எப்படி நடத்தினாரோ அதேபோல் நடத்தக் கூடாது என்றும் சேவாக் வெளிப்படையாக பேசியுள்ளார்.

தோனி
மேலும், எங்களுடைய காலத்தில் கேப்டன் வீரர்களுடன் சென்று கலந்து பேசுவார்கள். தற்போது, விராட் கோலி அப்படி செய்கிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. நான் அணி நிர்வாகத்தில் இல்லை. ஆனால், ஏசியா கோப்பைக்கு ரோகித் சர்மா கேப்டனாக சென்ற போது, அவர் அனைத்து வீரர்களுடனும் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2012 காமன்வெல்த் தொடரில் டாப் ஆர்டரில் சுழற்சி முறையில் மாற்றம் கொண்டு வருவதைப் பற்றி மீடியாவில் பேசிய தோனி, தங்களை ஸ்லோ பீல்டர்கள் என்று விமர்சித்திருந்ததை சுட்டிக்காட்டிய ஷேவாக், “அதுகுறித்து எங்களிடம் அவர் கேட்டதேயில்லை, கலந்து கொண்டதும் இல்லை. மீடியாவில் அவர் பேசிய பிறகுதான் எங்களுக்கே தெரியும். அவர் வீரர்களுடனான கலந்துரையாடலின் போது சொல்லாமல் மீடியாவில் பேசியுள்ளார். தோனியைப் போல விராட் கோலியும் தற்போது வீரர்களிடம் கலந்துரையாடாமல் இருந்தால் அது தவறு” என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.