நியூசிலாந்துக்கு எதிராக கராச்சியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்ப்பதற்காக பாகிஸ்தான் அணி போராட ஆரம்பித்துள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் அடித்த இரட்டை சதத்தால் நிலைமை தலைமை கீழாக மாறியுள்ளது. டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சி தேசிய மைதானத்தில் கடந்த திங்களன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்த நிலையில், அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டை எதிர்கொண்டது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசம் 161 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர்வதற்கு உதவினார். மற்றொரு வீரர் அகா சல்மான் அதிரடியாக விளையாடி 103 ரன்களை எடுத்தார். விக்கெட் கீப்பர் சப்ராஸ் அகமது, கேப்டன் பாபர் ஆசம் உடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தி இருந்தார். இவர் முதல் இன்னிங்சில் 86 ரன்களை சேர்த்தார்.
130.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களை எடுத்தது. நியூஸிலாந்து தரப்பில் கேப்டன் டிம் சவுதி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அஜாஸ் படேல், பிரேஸ் வெல், ஐஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக லாதம் மற்றும் கான்வே ஆகியோர் களத்தில் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். லாதம் 113 ரன்களிலும், கான்வே 92 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் களமிறங்கிய வில்லியம்சன் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவருக்கு ஐஷ் சோதி சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.
இருவரும் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சோதி 65 ரன்களில் வெளியேற, சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் 200 ரன்கள் எடுத்தார்.
டெஸ்ட் போட்டிகளில் வில்லியம்சன் அடிக்கும் 5ஆவது இரட்டை சதம் இதுவாகும். 194.5 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 612 ரன்களை எடுத்திருந்தது.
வங்கதேச அணியின் பயிற்சியாளர் ராஜினாமா… இந்தியாவுக்கு எதிரான தொடர் தோல்வியால் முடிவு
அப்போது ஆட்டத்தை டிக்ளேர் செய்து கொள்வதாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி அறிவித்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை எடுத்துள்ளது.
தொடக்க வீரர் அப்துல்லா சபீக் 17 ரன்னிலும், அடுத்துவந்த ஷான் மசூத் 10 ரன்களிலும் வெளியேறினர். தற்போது இமாம் உல் ஹக் 45 ரன்னிலும், நவுமன் அலி 4 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணி தற்போது 97 ரன்கள் பின்தங்கி உள்ளது. இதனைக் கடந்து, கூடுதல் ரன்கள் எடுக்க வேண்டும் அல்லது கடைசி நாளான நாளை முழுவதும் விக்கெட் முழுவதையும் பறிகொடுக்காமல் விளையாட வேண்டும். இதனால் தோல்வியை தவிர்க்க பாகிஸ்தான் அணி போராடத் தொடங்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Pakistan cricket