மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி-20 இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் மூன்று போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்ற போதும், இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் பதிலடி கொடுத்தது. இதனால், 1-1 என தொடரில் சமநிலை எட்டப்பட்டது.
இந்நிலையில், கடைசி டி-20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில், இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் சார்பில் களமிறங்கிய ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி மூன்று பேரும் அசத்தலாக ஆடியதால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் குவித்தனர்.
241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்களாக, லெண்ட் சிம்மோன்ஸ் மற்றும் பிராண்டோன் கிங் ஆகியோர் களமிறங்கினர். சிம்மோன்ஸ் 7 ரன்களிலும் பிராண்டோன் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பூரான் ரன் ஏதும் எடுக்காமலும், ஹோல்டரும் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஹெட்மேயர் மட்டும் நிதானமாக ஆடி 41 ரன்கள் குவித்தார். மறுபுறம், பொல்லார்ட் அதிரடியாக ஆடி 39 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். ஆட்டநேர இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே குவித்தது. அதனையடுத்து, இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.