இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் நிகோலஸ் உடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி "Not Just Cricket" என்ற நிகழ்ச்சியின் மூலம் உரையாடினார். இதில் பேசுகையில் 2014ம் ஆண்டு இங்கிலாந்து சென்று விளையாடிய போது தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக விராட் கோலி கூறியிருக்கிறார்.
மார்க் நிகோலஸ் உடன் உரையாடிய போது, 2014ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போது அந்த அணியுடனான தொடர் மிகவும் கடினமாக இருந்தது எனவும் தான் ஒரு கடினமான கட்டத்தை கடந்து சென்றதாகவும் விராட் கோலி ஒப்புக்கொண்டார்.
அந்த நேரத்தில் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக என மார்க் நிகோலஸ் கேட்ட போது, ஆம் எனக்கு இருந்தது என கோலியிடம் இருந்து உடனடியாக பதில் வந்தது. தொடர்ந்து பேசிய கோலி, “இதில் இருந்து எப்படி மீள்வது என புரியவில்லை. சில விஷயங்களில் இருந்து எப்படி கடந்து வருவது என்று சுத்தமாக தெரியவில்லை. இந்த உலகத்திலேயே தனித்து விடப்பட்ட நபர் போன்று அப்போது உணர்ந்தேன்” என்று 2014 இங்கிலாந்து தொடர் குறித்து கூறினார்.
நீங்கள் ரன்கள் எடுக்க முடியாது என்பதை அறிந்து எழுந்திருப்பது ஒரு பெரிய உணர்வு அல்ல, சில கட்டங்களில் நீங்கள் எதையும் கட்டுப்படுத்த முடியாது என்று அனைத்து பேட்ஸ்மேன்களும் உணர்ந்ததாக நான் நினைக்கிறேன் எனவும் கோலி குறிப்பிட்டார்.
கோலி சுட்டிக்காட்டும் 2014 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் 1, 8, 25, 0, 39, 28, 0, 7, 6 மற்றும் 20 என ரன்கள் எடுத்திருந்தார். மேலும் 10 இன்னிங்ஸ்களில் அவரின் சராசரி 13.40 மட்டுமே.
இருப்பினும் அடுத்ததாக நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் தான் இழந்த ஃபார்மை கோலி பெற்றார். அந்த தொடரில் அவர் 692 ரன்களை குவித்து தனக்கு எதிரான விமர்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
நவீன கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களுள் ஒருவராக திகழும் விராட் கோலி, ஒரு நபரின் வாழ்க்கையை மன அழுத்தத்தால் அழிக்க முடியும் என கூறுகிறார்.
மனநல பிரச்சினைகளுடன் பலரும் நீண்ட காலமாக போராடுகின்றனர். சில நேரங்களில் மாதக்கணக்கில், ஒரு முழு சீசனுக்கும் கூட இது தொடருகிறது. இதில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
தனது மிகப்பெரிய ஆதரவாளராக விளங்கிய தந்தை பிரேம்சந்தை தன் 18 வயதிலேயே இழந்தவர் விராட் கோலி. இதுவே அவரை கடுமையாக பாதித்த வாழ்க்கை நிகழ்வு என கூறியிருக்கிறார்.