316 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், பாகிஸ்தான் அணி இன்று களமிறங்குகிறது.
உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. தற்போது வரை புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
நியூசிலாந்து அணி 9 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இனி போட்டிகள் இல்லை. ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி 9 புள்ளிகளுடன் இருக்கிறது. பாகிஸ்தானுக்கு இன்னும் ஒரு போட்டி வங்கதேச அணியுடன் இருக்கிறது.
வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வென்றால் 11 புள்ளிகளை அந்த அணி எட்டும். அப்போது, நியூசிலாந்து அணி ரன்ரேட் அடிப்படையில் நான்காவது இடத்தை தக்க வைத்துக்கொள்ளும். பாகிஸ்தான் நான்காவது இடத்தைப் பிடித்து, அரையிறுதிக்குள் நுழைய வேண்டும் என்றால் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வங்கதேச அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்.
அதிர ரன்ரேட் என்றால் கிரிக்கெட்டில் ஒரு மாபெரும் சாதனையை நடத்தி பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும். இந்த வெற்றிக்கு வங்கதேச அனியும் மனது வைத்து தியாகம் செய்ய வேண்டும். அப்படி என்ன சாதனை வெற்றி என்கிறீர்களா? அதனை விரிவாக பார்க்கலாம்.

வங்கதேச அணி
லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி குறைந்தபட்சம் 316-க்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்வது அவசியம். அதாவது, பாகிஸ்தான் 400 ரன்கள் எடுத்தால், வங்கதேசத்தை 84 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய வேண்டும்.
அதுவே, 350 ரன்கள் எடுத்தால், 38 ரன்களுக்குள் வங்கதேசத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
ஒரு நாள் கிரிக்கெட்டைப் பொறுத்த வரை நியூசிலாந்துக்கு எதிராக 290 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றதே இதுவரை மிகப்பெரிய வெற்றியாகும். இந்த சாதனையை பாகிஸ்தான் உடைத்தால் மட்டுமே அதன் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். மேலும், டாஸ் வென்று ஒருவேளை வங்கதேச அணி பேட்டிங் செய்தால், பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு அம்போ!
முதலில் பேட்டிங் செய்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அதிக ரன்கள் குவித்து, வங்கதேச அணியை குறைந்த ரன்களின் கட்டுப்படுத்த ஏதேனும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தால் பாகிஸ்தான் அணிக்கு அந்த அரிய வாய்ப்பும் கிடையாது.

பாகிஸ்தான் அணி
“500 ரன்களுக்கு மேல் குவித்து, வங்கதேசத்தை 50 ரன்களுக்குள் சுருட்ட முயற்சிப்போம்” என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் நம்பிக்கையுடன் பேட்டியளித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி அதிகபட்சமாக 399 ரன்களை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.