டோக்கியோவில் நடைபெறும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதால் முதல் பதக்க வாய்ப்பு உறுதியாகியுள்ளது.
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியான முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதியில், உலக சாம்பியன்களும் உலகின் 2ம் நிலை ஜோடியுமான ஜப்பானின் டகுரோ ஹோக்கி மற்றும் யூகோ கோபயாஷியை 24-22, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர். இதன்மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக பதக்கம் வென்ற இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி பெற்றுள்ளனர்.
2011 ஆம் ஆண்டு பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜுவாலா குட்டா மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் பதக்கம் வென்றதற்குப் பிறகு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் பதக்கம் இதுவாகும். மற்றொரு ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், இந்தோனேசியாவின் ஹென்ட்ரா செட்டிவா மற்றும் முகமது அஹ்சன் ஜோடியை எதிர்த்து களம் கண்ட இந்தியாவின் எம் ஆர் அர்ஜுன் மற்றும் துருவ் கபிலா இணை, 8-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.