செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றில் இந்திய அணிகள் களமாடிய அனைத்துப் போட்டிகளிலும், வீரர், வீராங்கனைகள் வெற்றியை பதிவுசெய்து கவனம் ஈர்த்துள்ளனர்...
உலகமே எதிர்நோக்கியிருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக நேற்று தொடங்கியது. இதில், 186 நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியாவைப் பொறுத்தவரை ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா 3 அணிகள் என 6 அணிகள் களம் கண்டுள்ளன. போட்டியை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஒவ்வொரு அணியும் மொத்தம் 11 சுற்றுகளில் விளையாடும், அதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படும். நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில், இந்திய ஆடவர் 'ஏ' அணி, ஜிம்பாப்வே அணியுடன் மோதியது. இந்தியாவின் விதித் குஜராத்தி, ஜிம்பாப்வே வீரர் மக்கோடோவை வீழ்த்தினார். மேலும், அர்ஜூன், 38 வது நகர்த்தலிலும், நாராயணன் 33 வது நகர்த்தலிலும், சசிகிரண் 39 வது நகர்த்தலிலும் தங்களை எதிர்த்து விளையாடிய ஜிம்பாப்வே வீரர்களை வென்றனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய ஆடவர் 'பி' அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. இந்த அணியில் விளையாடும் ரவுனக் சத்வானி, இந்தியாவுக்காக முதல் வெற்றியை ஈட்டிக் கொடுத்தார். இவர், தன்னை எதிர்த்து காய் நகர்த்திய அமீரக வீரர் அப்துல் ரஹ்மானை 36-வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றியை வசப்படுத்தினார். கருப்பு காய்களுடன் ஆடிய குகேஷ், நீண்ட போராட்டத்துக்குப் பின் 49-வது நகர்த்தலில் அல் ஹொசானியை தோற்கடித்தார். இதேபோன்று, அதிபன், நிகில் சரினும், வெற்றியை ஈட்டித் தந்தனர். முதல் சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தா-வுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க : வெறும் 4 மாதங்களில் இது சாத்தியமே இல்லை; செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை வியந்து பாராட்டும் செஸ் வீரர் வீராங்கனைகள்!
ஆடவர் 'சி' பிரிவு அணி, தெற்கு சூடான் அணியை சந்தித்தது. தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் அசத்தினர். அத்துடன், அபிஜித் குப்தா, அபிமன்யூ புரானிக் ஆகியோரும் எதிராளிகளை வீழ்த்தி, தங்களது அணியை வெற்றிபெறச் செய்தனர்.
மகளிர் பிரிவில் நம்பர் ஒன் அணியான இந்தியா 'ஏ', தஜிகிஸ்தான் அணிக்கு எதிராக காய் நகர்த்தியது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி வெள்ளை நிற காய்களுடன் ஆடினார். இவர், தன்னை எதிர்த்து ஆடிய அப்ரோவாவை 39 வது நகர்த்தலில் வீழ்த்தினார். எஞ்சிய மூன்று வீராங்கனைகளும் வெற்றியை வசப்படுத்திக் கொடுத்தனர்.
மேலும், இந்திய 'பி' அணி வேல்ஸ் அணியுடனும், இந்திய 'சி' அணி ஹாங்காங் அணியுடனும் மௌன யுத்தம் நடத்தின. இந்த அணிகளும், 4-0 என்ற விகிதத்தில் வெற்றிபெற்று அசத்தின.
முதல் சுற்றில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் 6 அணிகளும் வெற்றிபெற்று எதிரணிகளை வாஷ்-அவுட் செய்தன அத்துடன், 6 பிரிவுகளிலும் ஆடிய 24 இந்திய வீரர், வீராங்கனைகள் எதிராளிக்கு வாய்ப்பளிக்காமல், வெற்றிக் கனியை ருசித்தனர். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாள் ஆட்டம், இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.