முருகன் என்றாலே தமிழ் கடவுள் என நம் அனைவருக்கும் தெரியும். முருகனுக்கு உகந்த நக்ஷத்ரங்களாக அழைக்கப்படுவது க்ருத்திகை - பூசம் - விசாகம். இந்த நக்ஷத்ரங்களில் பௌர்ணமி வரும் நாள் முருகனுக்கு உகந்த நாட்களாக சொல்லப்படுகிறது. அதாவது திருக்கார்த்திகை - கார்த்திகை மாதம் வரும் பௌர்ணமி, அதே போல் தை மாதம் பௌர்ணமி வரும் நாள் தைப்பூசம், இதே போல் வைகாசி மாதம் வரும் பௌர்ணமி வைகாசி விசாகம் என்று சொல்லப்படுகிறது. இந்த வைகாசி விசாகம் முருகன் பிறந்த நாளாக கருதப்படுகிறது. விசாகம் நக்ஷத்ரத்திற்கு என்று பல சிறப்புகள் உள்ளது. அதில் முக்கியமானது ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி விரதம் துவங்குவது இந்த விசாக நக்ஷத்ரத்தில்தான். இந்த விசாக நக்ஷத்ரத்திற்கு ஜோதிட ரீதியாக குரு அதிபதி ஆவார்.
இந்த வருடம் வைகாசி விசாக தேதி : 25 மே 2021, செவ்வாய்க்கிழமை. இந்த வருடம் முருகனுக்கு உகந்த கிழமையான செவ்வாய்கிழமை அன்று வைகாசி விசாகம் வருவது மிகவும் சிறப்பானதாகும்.
வைகாசி விசாகம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது:
முருகன் நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி. தைரியம் - வீரம் - வீடு மனை - வாகனப் ப்ராப்தம் - ரத்தம் சம்பந்தமான உறவுகள் - செல்வம் போன்ற பல விஷயங்களுக்கு அதிபதி முருகன். முருக பெருமானின் பிறந்த நாளை வைகாசி விசாகம் என்ற பெயரில் விழாவாக கொண்டாடுகிறோம். இந்த திருவிழா முக்கியமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
வைகாசி விசாகம் நாளின் சிறப்புகள்
வைகாசி விசாகம் வெப்பம் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் வருவதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய திருக்கோயிலில், கருவறையில் தண்ணீர் நிற்கும் படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உற்சவம் எனும் உற்சவம் நடைபெறும். இது வெப்பம் தணிக்கும் விழா என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நாளில் இறைவனுக்கு சிறுபருப்பு பாயசம், அப்பம், நீர்மோர் முதலியவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. அதே போல் திருச்செந்தூர் வசந்த மண்டபத்தில் வசந்த மண்டபத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை விடுகின்றனர். முருகனின் வாயிலிருந்து சிந்திய பாலினை குடித்த அந்த மீன்கள் சாப விமோசனம் பெற்று பராச முனி குமாரர்களை நினைவுபடுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவ பொம்மை வைத்து முருகன் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
அம்மனிடமிருந்து முருகன் சக்தியைப் பெற்ற நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது.
மகாபாரதத்தின் வில் வித்தகனான அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்ற நாள்.
பன்னிரு ஆழ்வார்களில் முக்கியமான நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.
வைகாசி விசாக சுப தினத்தில் தான் திருமழப்பாடி என்ற ஊரில் சிவபெருமான் மழு என்ற ஆயுதத்தை ஏந்தி திருநடனம் ஆடிய அற்புத நாள்.
தஞ்சை பெரிய கோயிலில் பல கல்வெட்டுகள் இருக்கிறது. அதில் பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக அரங்கேற்றுபவர்களுக்கு, ஆண்டுதோறும், வைகாசி விசாக தினத்தில் நாடக கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கி ராஜேந்திர சோழன் ஆணையைப் பிறப்பித்ததாகக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமலிங்க அடிகளார் தன் சத்யஞான சபையை வடலூரில் நிறுவிய தினம்.
இந்த சிறப்பான நாளில் தான் பெரும்பாலான முருகன் கோவில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது.
முருகன் அவதரித்த வைகாசி விசாக தினத்தில் பிறப்பவர்கள் அறிவுக்கூர்மையுடன், பல புகழ்களை அடைவார்கள் என கருதப்படுகிறது.
நேபாளத்தில் கபிலவஸ்து பேரரசர் சுத்தோனா கெளதமாவின் குமரன் சித்தார்த்தர் எனும் கெளதம புத்தர் வைகாசி விசாக புண்ணிய நாளில் தான் ஞானத்தை அடைந்த நாளாக கருதப்படுகிறது.
இப்படி பல சிறப்புகள் நிறைந்த வைகாசி விசாக தினத்தில் நாமும் விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்கினால் ஞானமும், எல்லா வகை செல்வமும் கிடைத்து சிறப்பாக வாழலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rasi Palan