வடபழனியில் உள்ள அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் இன்று குடமுழுக்கு நிகழ்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஆன்லைனில் ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியில் அமைந்துள்ள அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் முருகன் கோவில்களில் மிகவும் பிரபலமானது. உள்ளூர் மட்டுமல்லாது, வெளி மாநிலங்கள், வெளி நாட்டு பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்காக வடபழனி முருகன் கோவிலுக்கு வருவது உண்டு. இந்த கோவிலில் கடைசியாக 2007ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
ஆகமவிதிகளில்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதால் இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது. இன்று காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக குடமுழுக்கு நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை அதேவேளையில், வடபழனி முருகன் கோவிலின்
யூடியூப் பக்கத்தில் குடமுழுக்கு நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
முருகப்பெருமானுக்கு 33 ஹோம குண்டங்கள், பரிவார தெய்வங்களுக்கு 75 ஹோம குண்டங்கள் ஆக மொத்தம் 108 குண்டங்களுடன் பிரமாண்டமான முறையில் யாகசாலை அமைக்கப்பட்டு பூஜை நடந்து வருகிறது. அதில், கங்கை, யமுனை, துங்கபத்ரா, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட நதிகள் மற்றும் ராமேஸ்வரம் தீர்த்த கிணறு, அறுபடை முருகன் திருத்தலங்கள் என பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த புனித நீர் கும்பாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.