கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏழுமலையான் கோவில் தெப்ப உற்சவம் நேற்று தொடங்கியது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில்களில் பெரிய அளவிலான உற்சவங்கள், திருவிழாக்கள் ஆகியவை நடத்தப்படாமல் இருந்தன. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் குறிப்பிடத்தகுந்த வகையில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே கோவில்களில் வழக்கம்போல் உற்சவங்கள், திருவிழாக்கள் ஆகியவை நடைபெற துவங்கியுள்ளன.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டுக்கிடந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்ப உற்சவம் நேற்று துவங்கியது. 5 நாட்கள் நடைபெறும் தெப்போற்சவத்தின் முதல் நாளான நேற்று சீதா தேவி சமேத ராமர், லட்சுமணர் ஆகிய உற்சவ மூர்த்திகள் ஆஞ்சநேயர் உடன் தெப்போற்சவம் கண்டருளினர்.
ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள சுவாமி புஷ்கரணி தெப்பக்குளத்தில் நடைபெற்ற தெப்ப உற்சவத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். முதல் நாளான நேற்று உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று சுற்றுகள் வலம் வந்து தெப்போற்சவம் கண்டனர்.
2-ம் நாளான இன்று ஸ்ரீ கிருஷ்ணர், ராதா, ருக்மணியுடன் தெப்ப உற்சவம் நடக்கிறது. 3-வது நாளான நாளை ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவியுடன், 4-வது நாள் 5 சுற்றுகளும், 5-வது நாள் 7 சுற்றுகளும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர்.
இந்நிலையில் தெப்ப உற்சவத்தையொட்டி நாளை முதல் வரும் 17-ந் தேதி வரை 5 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் நேற்று 65,192 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,592 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.