வைகுண்ட ஏகாதசி அன்று விஐபி பக்தர்களுக்காக சாதாரண பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்று சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் திருப்பதி தேவஸ்தான கோயில்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் இரண்டாம் தேதி வைகுண்ட ஏகாதசி. அன்றைய தினம் விரதம் இருந்து பெருமாள் கோயில்களில் வழிபாடு செய்து அவற்றில் உள்ள சொர்க்கவாசலில் பிரவேசம் செய்தால் மறுபிறவி இருக்காது என்பது பக்தர்களிடம் நிலவும் நம்பிக்கை.
எனவே வைகுண்ட ஏகாதசி தினம் அன்று பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஸ்ரீரங்கம், திருப்பதி ஏழுமலையான் ஆகிய கோயில்களில் வைகுண்ட ஏகாதசி அன்று சாமி கும்பிடுவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
அதனால் வைகுண்ட ஏகாதசி அன்று விஐபி பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தரிசன ஏற்பாடுகள் செய்து கொடுப்பது வழக்கம்.
Also see... திருப்பதி லட்டின் சுவாரஸ்யம் நிறைந்த வரலாறு!
தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏழுமலையான் கோயில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை நேற்று கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் கோயில் அதிகாரிகளுடன் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்தினார்.
அப்போது வைகுண்ட ஏகாதசி அன்று கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்றும், சாமி கும்பிடுவதற்காக பக்தர்கள் செல்வதற்கு தேவையான வரிசைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.
மேலும் சாதாரண பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக வரிசையில் சென்று கொண்டிருக்கும்போது விஐபிகள் யாராவது வந்தால் சாதாரண பக்தர்களை தடுத்து நிறுத்தக்கூடாது. அவர்களை எந்த விதமான தொந்தரவும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். இதனை தேவஸ்தான கோயில்களில் நிர்வாக பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அப்போது தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலை பொறுத்தவரை இம்மாதம் இரண்டாம் தேதி துவங்கி 12-ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
வைகுண்ட ஏகாதசி தினம் அன்று சுப்ரபாத சேவை முடிந்தபின் கோயிலில் உள்ள சொர்க்கவாசல் திறக்கப்படும். அதன் பின்னர் ஜீயர்கள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், நீதிபதிகள், மத்திய மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும்.
Also see... மார்கழி மாதம் 2022 - விழாக்கள், விசேஷங்கள் மற்றும் விரத நாட்கள்!
அதனை தொடர்ந்து சாதாரண பக்தர்கள் வரிசையில் சென்று ஏழுமலையானை வழிபட்டு வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirupati