நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 7ம் நாள் தேர் திருவிழாவான லட்சக்கணக்கான பக்தர்கள் பஞ்ச மூர்த்திகளின் மரத்தேரினை வடம் பிடித்து இழுத்து மாடவீதியில் வலம் வருவார்கள்.
ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்றால் திருவிழாக்கள் மாடவீதிகளில் நடைபெறாமல், திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்று அதிகாலை கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் பஞ்ச அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனையடுத்து கோவில் ஊழியர்களால் பஞ்சமூர்த்திகள் தோளில் சுமந்து வந்து ஆயிரங்கால் மண்டபம் அருகே பிரத்யேகமாக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருளினர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகளுக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் சிறிது தூரம் பிரத்யேகமாக தேரை வடம் பிடித்து வந்தனர். அதன்பின் தேரை டிராக்டர் உடன் இணைத்து பஞ்சமூர்த்திகளும் திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதில் கணிசமான பக்தர்கள் பங்கேற்று அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கங்களை எழுப்பினர்.
நிறைவு நாளான 10ம் நாள் நவம்பர் 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோவிலின் கருவறையின் முன்பு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை கோவிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையில் 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. அதேவேளையில் அன்றைய தினம் கிரிவலம் செல்லவும், மலை ஏறவும் மாவட்ட நிர்வாகம் முற்றிலுமாக தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.