நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா தொடர்பாக சிதம்பரம் சார் ஆட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 150 தீட்சிதர்கள் பங்கேற்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் 150 தீட்சிதர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 2 தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர்களோடு தொடர்பில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.
அதனால் கோயில் திருவிழாவை நடத்த 5 தீட்சிதர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என வருவாய்த்துறை மற்றும் காவல்துறை தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கோவில் உள்ளே இருந்த 100க்கும் மேற்பட்ட தீக்ஷிதர்கள் வெளியேற மறுத்ததால் அவர்களிடம் சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன், கோவிலை விட்டு வெளியே வருமாறு பலமுறை கூறினார். ஆனாலும் அவர்கள் வெளியே வரவில்லை.
இதையடுத்து டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக கோயிலுக்குள் சென்று தீட்சிதர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று ஆனித்திருமஞ்சன தேரோட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கோவில் உள்ளே 25 தீட்சிதர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு சித்சபையில் இருந்த நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அங்கிருந்து நடராஜ பெருமானை தேவசபைக்கு தீட்சிதர்கள் கொண்டுசென்று வைத்துள்ளனர்.
இன்று ஆனித்திருமஞ்சன தரிசன விழா விற்கு குறைந்த அளவில் தீட்சிதர்களை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் தகவல் கூறப்படுகிறது. உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம் இந்த வருடம் கொரோனா தொற்றால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோவிலின் நான்கு வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.