தமிழர் திருநாள் என்றால் பொங்கல் திருநாளை முதன்மைப்படுத்தி கூறுவோம். அந்த அளவிற்கு தமிழர்களின் பண்பாட்டில் பொங்கல் திருநாள் பெரும் பங்கு வகிக்கிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகையில் இருந்து தான் இத்திருநாள் தொடங்குகிறது. போகி பண்டிகையை எதற்காக கொண்டாடுகிறோம் என்று கேட்டால், 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்று குறிப்பிடுவோம். வேளாண்மையே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தபோது போகிப் பண்டிகை சுத்தம் செய்யும் விழாவாக மட்டும் இன்றி சுகாதாரம் பேணும் விழாவாகவும் இருந்து வந்துள்ளது. அந்த ஆண்டு முழுக்க உடுத்திய பழைய உடைகள், கால்நடைகளுக்கு சேமித்து வைத்திருந்த பழைய வைக்கோல் போன்றவை எல்லாம் தீயிட்டு அழித்துவிட்டு புதியவைகளை ஏற்கும் நாளாக போகி இருந்துள்ளது. பழையனப் போக்கி, புதியன ஏற்கும் இந்த நாளில் செய்ய வேண்டியவை என்னென்ன? செய்யக்கூடாதவை என்னென்னெ என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
செய்ய வேண்டியவைகள்
1. போகியில் வீட்டு தெய்வங்களை வழிபடுவது நல்லது. அதனால் நம் முன்னோர்களை குலதெய்வ கோயிலுக்குச் சென்றோ, நடுவீட்டில் விளக்கேற்றியோ வழிபடலாம்.
2. வீட்டில் கன்னிப்பெண்கள் இறந்து போய் இருந்தால் அவர்களை நினைத்து புத்தாடை வாங்கி படையலுடன் வைத்து படைத்து கும்பிட வேண்டும். அதனால் குடும்பம் தழைக்கும்.
3. ஜனவரி மாதம் மழைக்காலம் முடிந்து குளிர் உச்சமாகும் காலம் என்பதால் அதிகம் நோய்க்கிருமிகள் பரவும் ஆபத்து உள்ளது. அதனால் வீடு முழுக்க மஞ்சள், சாணம் தெளித்து சாம்பிராணி, தூபம் போட்டு வீட்டை சுத்தமாக்கலாம்.
4. பச்சரிசியில் மாக்கோலம் இட வேண்டும். அப்படி செய்வதால் வீட்டின் முன் குருவிகள், சிறு சிறு ஜீவன்கள் வந்து உண்டு செல்லும்.
5. வீட்டு வாசலில், பின் வாசலில் மூலிகை இலைகளை கட்டி வைக்கலாம் அல்லது கோலத்தின் நடுவேயும் வைக்கலாம். இந்த மூலிகை கொத்தில் கட்டாயம் மாவிலை, நொச்சி, வேம்பு, ஆவாரம், மஞ்சள் கொத்து, தும்பை, பிரண்டை, துளசி இருக்க வேண்டும். இது சிறந்த நோய்த்தடுப்பானாக இருந்து உங்களையும் உங்கள் கால்நடைகளையும் பாதுகாக்கும் என்பது உணமை.
6. போகி பண்டிகை என்றால் நமது மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள், அழுக்கு, தீய குணங்கள் போன்றவற்றை முற்றிலுமாக நீக்கி, புதிய நல்ல எண்ணங்களை கொண்டு வர வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இதை உணர்த்தும் வகையில்தான் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரித்து வருகிறோம். தீய எண்ணங்களை எரிப்பதற்கு இது சமமாகும் என்று நம்பப்படுகிறது.
செய்யக்கூடாதவைகள்
1. போகி அன்று சிலர் வெள்ளை அடித்து வீட்டை சுத்தப்படுத்துவார்கள். அதைவிட போகிக்கு முன்னரே சுத்தப்படுத்துவதே முறையானது. போகி அன்று வழிபாடு செய்வதே நன்று.
2. டயர்களையும், பிளாஸ்டிக் பொருள்களையும் எரித்து காற்றை மாசாக்குவது செய்யவேக் கூடாத செயல்.
3. இந்திரன், சூரியன், வீட்டு தெய்வங்களை வரவேற்று வணங்கும் நாள் போகிப் பண்டிகை. அதனால் இந்த நாளில் மாமிசம் சமைக்கக் கூடாது. போதை வஸ்துக்கள், பகல் உறக்கம் எதுவும் கூடாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
4. இயற்கைக்கு எதிரான, காற்றை மாசுபடுத்தும் எந்த செயலையும் செயலை செய்யக்கூடாது.
5. அத்துடன் போகிப் பண்டிகைக்கு மட்டுமல்லாமல் பொங்கல், மாட்டுபொங்கல், மற்றும் காணும் பொங்கல் என இந்த பொங்கல் விடுமுறையில் சாப்பிடும் கரும்பு குப்பைகளையும் மற்ற குப்பைகளையும் சரியான முறையில் அப்புறப்படுத்துங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bhogi, Pongal 2023, Pongal festival