சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற இடத்தில் உள்ளது சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் இருக்கும் பைரவர் சிறப்பு வாய்ந்தவராக போற்றப்படுகிறார். காசியில் இருந்து வந்த போகர் என்னும் சித்தர், இந்த பைரவர் சிலையை வடிவமைத்ததாக கூறப்படுகிறது. பழனியில் இருக்கும் முருகப்பெருமானின் சிலையைப் போலவே, இந்த பைரவர் சிலையையும் நவபாஷாணத்தால் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த பைரவர் சிலைக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் மற்றும் சாத்தப்படும் வடை மாலை போன்றவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதில்லை. அவற்றை கோவிலின் மேல் பகுதியில் போட்டு விடுகிறார்கள். அவற்றை பறவைகள் கூட உண்பதில்லை. ஏனெனில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட அந்த சிலையின் வீரியம் அதிகம் என்கிறார்கள். பழனி முருகனின் சிலையைச் செய்வதற்கு முன்பாகவே இந்தச் சிலையை போகர் செய்ததாக செவி வழி செய்தி கூறப்படுகிறது.
இந்த நவபாஷாண பைரவரை வழிபாடு செய்வதற்கு பூர்வ புண்ணிய பலன் அவசியம் என்கிறார்கள். இவரை வழிபட்டால் சனி தோஷம், பித்ரு சாபம், ஸ்திரி தோஷம், சகல பாவங்கள், நீண்டகால நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்த சிலை சித்தர்கள் 12000 ஆண்டுகளாக வணங்குவதாக நம்பிக்கை நிலவுகிறது. எட்டு கைகளுடன் ஆயுதம் ஏந்தி கபால மாலையுடன் இருக்கும் இவருக்கு பெளர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது .
இந்த கோவிலில் சனி பகவான் வடகிழக்கு மூலையான சனி மூலையில் தனியாக காட்சி தருகிறார் . வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் இவர் பைரவரை தரிசித்தவாறு இருக்கிறார் . சனீஸ்வரனின் வாத நோயை பைரவர் குணப் படுத்தியதால் பைரவர் சனீஸ்வரரின் குருவாகிறார் . பைரவரின் நட்சத்திரம் பரணி நட்சத்திரம் ஆகும் பரணி யில் பிறந்தவர்கள் இந்த தலத்தில் வழிபடுவது சிறப்பு .
தொடர்ந்து ஆறு பரணி நாட்களில் ராகு காலத்திற்கு முந்தைய முகூர்த்தத்தில் மூலவரான சுகந்தவனேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது பிணிகளை போக்கும் . ராகு காலத்தில் பைரவருக்கு விளக்கேற்றி பூஜை செய்தால் சகல தோஷங்களும் நீங்கும் . பைரவர் பயத்தை போக்க கூடியவர் . எப்பேற்பட்ட தீராத தோஷங்களும் பைரவ வழிபாட்டால் தீர்த்து விடும். ஓம் க்ரீம் மஹா பைர வாய நமஹ என்கிற மந்திரத்தை ஒரு சனிக்சிழமையில் 108 முறை சொல்லி பைரவ வழிபாட்டை தொடங்கலாம் .
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.