ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14 ம் தேதி மாலை நடைபெற உள்ளது. மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு 90,000 பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 14 ம் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்து விட்டதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
மகரவிளக்கை முன்னிட்டு வனத்துறையினர் ரோந்து பணி மற்றும் காட்டு தீ பரவாமல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். காட்டுத் தீயை தடுக்க மட்டும் பம்பையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது. மகரவிளக்கு தரிசனம் செய்ய ஐயப்ப பக்தர்கள் கூடும் புல்லுமேடு பகுதிகளில் தீ பரவாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மகரவிளக்கு தரிசனம் செய்யும் மையங்களில் தீயணைப்பு வீரர்கள் முன்கூட்டியே நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் எருமேலி-கரிமலை சாலை மற்றும் சத்திரம்- புல்லுமேடு சாலையில் கூடுதல் தீயணைப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு பகலாக ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பம்பை மற்றும் சன்னிதானத்தில் வனத்துறைக்கு சொந்தமான இரண்டு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் செய்யப்பட்டு வருகிறது.
யானைகள் நடமாட்டம் கண்காணிக்க தனி குழுவும் 24 மணி நேரம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் ஆபத்தான மரங்கள், மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர். ஆக்ரோஷமான பன்றிகளை பிடித்து வேறு இடத்திற்கு மாற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு 84 காட்டுப்பன்றிகள் வேறு இடத்தில் இடம் பெயர்ந்தன. இதுவரை 120 பாம்புகள் பிடிபட்டுள்ளன. நான்கு ராஜ வெம்பால , பத்து நாகப்பாம்புகள், பத்து விரியன் பாம்புகள் மற்றும் அதிக விஷமுள்ள பாம்புகள் பிடிபட்டுள்ளன. இவைகள் பக்தர்கள் நடமாட்டம் இல்லாத வேறு காட்டு பகுதிக்கு மாற்றப்பட்டது.
பாத யாத்திரை ஆக வரும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ ராபிட் ரெஸ்பான்ஸ்சிபிள் குழுவினர் தயார் நிலையில் உள்ளது. சபரிமலையில் வனக்காவலர்கள், சுற்றுச்சூழல் காவலர்கள், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
அதே போல நேற்று ஞாயிற்றுக்கிழமை மகரவிளக்கை முன்னிட்டு பம்பை ஆறு மற்றும் ஆற்றின் மணல்புறத்தில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.