காரடையான் நோன்பு என்பது, மரணத்தை வெல்ல முடியுமா என்ற கேள்விக்கு வெல்ல முடியும் என்று உதாரணமாக இருக்கும் சத்யவான் சாவித்திரி கதைதான். இது பற்றி நாம் அனைவருமே அறிந்த ஒன்றுதான். எமனுடன் போராடி, கணவரின் உயிரை மீட்டெடுத்தாள் சாவித்திரி. மேலும் சாவித்திரியின் மாமியார், மாமனாருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைத்தது. எம தர்மனுக்கு ஆத்மார்த்தமாக நன்றி தெரிவித்தாள் சாவித்திரி. அப்படி எமனுடன் போராடும்போது அம்மனுக்கு விரதம் இருந்தாள் சாவித்திரி. அப்போது பூஜையும் நைவேத்தியமும் செய்ய நினைத்து தொடங்கிய விரதம்தான் இந்த காரடையான் நோன்பு. இது பொதுவாக மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் கடைப்பிடிக்கப்படிகிறது.
இந்த விரதத்தின்போது திருமணம் ஆன பெண்கள் தங்களது கணவன் நன்றாகவும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று அம்பாளை வணங்குவார்கள். அதுமட்டுமல்லாமல் திருமணம் ஆகாத கன்னி பெண்கள், ராகு-கேது தோஷங்கள், கிரக தோஷங்கள் உள்ளதால் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத பெணகள் என அனைவரும் இந்த விரதம் மேற்கொண்டால் அடுத்த காரடையான் நோன்பு வருவதற்குள் திருமண ஆகிவிடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்று உள்ளது. இந்த விரதம் தோஷங்களை போக்கக்கூடிய விரதமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
புராணக்கதை:
விதியை வென்றாள் சத்யவான் சாவித்திரி, விதி முடிந்தது எனக் கூறி எமன் சத்தியவானை தூக்கிக்கொண்டு செல்லும்போது காட்டில் அவரை பின் தொடர்ந்து சென்றாள் சாவித்திரி. என் கணவனை நான் மீட்டெடுப்பேன் என்று எமனுடன் போராடினாள், அதற்கு எமன் அம்மா என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நீ என் பின்னால் வருவது தேவையில்லாதது. அவன் விதி முடிந்தது. இனி ஒன்றுமே செய்ய முடியாது என்றார். ஆனால் சாவித்திரி விடாமல் சென்றுகொண்டே இருந்தாளாம். அத்துடன் அந்த காட்டிலேயே அப்போது கிடைத்த கார் அரிசி, தட்டை பயிறு தேங்காய்களை வைத்து அடை செய்து அம்பாளுக்கு விரதமும் மேற்கொணாடாளாம்.
உடனே எமன் சரி சாவித்திரி உனக்கு வேற ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேள் தருகிறேன். கண்டிப்பாக உன் கணவனை தர மாட்டேன் என்றாராம். அதற்கு சாவித்திரி எனக்கு போரில் பின் வாங்காத பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்று கேட்கிறாள். அவள் கேட்டவுடனேயே எமதர்மன் சற்றும் யோசிக்காமல் வரத்தை தந்துவிடுகிறான். ஆனால் பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்றால் சத்யவான் வர வேண்டும் என்றுதானே அர்த்தம். எமன் வேறு வழி இன்றி சத்தியவானை திருப்பி அனுப்பினார் என புராணக்கதைகள் கூறுகின்றன.
எமனுடைய மதியை மயக்கியது அம்பாள்தான். சாவித்திரி செய்த அந்த கார் அரிசியினால் ஆன அடை நிவேதனம், கெளரி விரதம் என்ற காரடையான் நோன்பு விரதம் கடைபிடித்த காரணத்தினால் அம்பாள் என் பிள்ளைக்கு என் பக்தைக்கு எதாவது செய்ய வேண்டும் என்று அப்படி எமனின் மதியை மயக்க செய்தாளாம் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
Also see... காரடையான் நோன்புக்கு அடை செய்ய பிளான் இருக்கா? இதோ ரெசிபி..!
பலன்கள்
அதுமட்டுமல்லாமல், இந்த விரதம் இருந்தால் குழந்தைகள், கணவனுடைய ஆயுள் மற்றும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெண்களும் தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம். இந்த பூஜை மிக எளிமையான பூஜைதான். நம் வீட்டிலேயே செய்யலாம். பூஜையறையில் மாவிலை தோரணம் கட்டி, சிறிய கோலம் போட்டு விட்டு ஏதாவது அம்மனின் படத்தை வைத்து மஞ்சள் குங்குமம் வைத்து காரடையான் அடையை நிவேதனம் செய்து பூஜை செய்யலாம்.
ஒரு வாழை இலையை வைத்து அதில் இரண்டு கார் அரிசியினால் செய்யப்பட்ட அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையில், வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப் பழங்களும் வைக்க வேண்டும். அதன் மீது நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும். அவற்றுக்கு எதிரே அமர்ந்து, இலையைச் சுற்றி நீர் தெளித்து நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு தாலிச்சரடையும் நோன்புச் சரடையும் கழுத்தில் கட்டிக்கொள்ளுங்கள்
மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
மாங்கல்ய பலம் பெறும். தோஷங்கள் நிவர்த்தியாகும். தாலிபாக்கியத்துடன் தீர்க்க சுமங்கலியாக நீடூழி வாழ இந்த காரடையான் நோன்பு விரதம் சிறந்தது என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dhosham | தோஷம், Hindu Temple