உலக பிரசித்தி பெற்ற கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெகு விமர்சையாக நடைபெற்றப்போது உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதன்பிறகு கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக எவ்வித திருவிழாக்களும் நடைபெறாமல் இருந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 13ந் தேதியன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
பிரம்மோற்சவத்தை யொட்டி அனுதினமும் உற்சவர் வரதராஜப்பெருமாள் தங்க சப்பரம், சேஷ வாகனம், யானை வாகனம், கருட வாகனம் உள்ளிட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து நகரின் முக்கிய வீதிகளில் திரு வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
இந்நிலையில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று மிக முக்கிய உற்சவமும்,பிரசித்திப்பெற்ற திருத்தேர் பவனி திருவீதி விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது.

தேர்
அதனையொட்டி கோவில் வாகன மண்டபத்தில் உற்சவர் வரதராஜப் பெருமாள் நீளம் மற்றும் ரோஸ் நிற பட்டு உடுத்தி தங்க, வைடூரிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காந்தி ரோடு தேரடி பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு 73 அடி உயரமும், 7 நிலைகளும் கொண்ட பல அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உடைய திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் சிறப்பு தீபாராதனைகள் சமர்பிக்கப்பட்டு பச்சை கொடி காட்டப்பட்டு அதிர் வேட்டுகள் வெடிக்க,மேளத்தாளங்கள் முழங்க, பஜனைப்பாடல்கள் ஒலிக்க காஞ்சிபுரம் எம்.எம்.ஏ சி.வி.ம்.பி எழிலரசன், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.சத்யப்பிரியா,காஞ்சிபுரம் எஸ்.பி.டாக்டர் எம்.சுதாகர் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா,வரதா வரதா, அத்தி வரதா" என விண்னை பிளக்கும் பக்தி கரகோசத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச்செல்ல நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த இரு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் வெள்ளத்தில் வரதர் திருத்தேரில் திரு வீதி உலா வந்தது குறிப்பிடத்தக்கது.
Also see...வைகாசி மாத சதுர்த்தி விரதம் இன்று... விநாயகரை வணங்கினால் சிறப்பு...
மேலும் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும், நீர் மோர் பானகங்களும் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர் தலைமையில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.