திருப்பதியில் அடுத்த மாதம் 2ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 10 நாட்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட் அல்லது இலவச தரிசன டோக்கன் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் இரண்டாம் தேதி (ஜனவரி 2) வைகுண்ட ஏகாதசியாகும். அன்று துவங்கி 11ஆம் தேதி வரை 10 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதனை முன்னிட்டு ஏற்கனவே நாள் ஒன்றுக்கு 22,000 என்ற எண்ணிக்கையில் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் என 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் தேவஸ்தான நிர்வாகம் விற்பனை செய்துள்ளது.
இது தவிர தேவஸ்தானத்தை ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா 10,000 ரூபாய் நன்கொடை வழங்கிய பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2000 என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 20000 டிக்கெட்டுகளை தேவஸ்தானம் விற்பனை செய்து முடித்து விட்டது . இது தவிர திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் நாள் ஒன்றுக்கு 50,000 என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் ஐந்து லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் விற்பனை செய்ய உள்ளது.
எனவே இவற்றில் ஏதாவது ஒரு டிக்கெட்டை கொண்டு வராத பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி கிடையாது. அதனால் எந்தவிதமான டிக்கெட்டுகளும் இல்லாமல் திருப்பதி மலைக்கு நேரடியாக செல்லும் பக்தர்களுக்கு, தற்போது நடைமுறையில் இருக்கும் இலவச தரிசன வசதி அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.