முகப்பு /செய்தி /ஆன்மிகம் / வேண்டுதலை நிறைவேற்றும் புதன் பகவான்! உரிய ராசிகள் இதுதான்..!

வேண்டுதலை நிறைவேற்றும் புதன் பகவான்! உரிய ராசிகள் இதுதான்..!

புதன்

புதன்

Budhan Bhagavan | புதன் கிழமையில் புதன் பகவானை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம்...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, இந்த இடத்தில் பொன் என்பது செல்வத்துக்கான அதிபதி குருவை குறிக்கும். ஜாதகத்தில் குருவின் பலம் இருப்பதைவிட புதன் பலமாக இருக்க வேண்டும் என்பதையே சூசகமாக குறிப்பிட்டுள்ளனர்.

கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதி புதன் கிரகம். எந்த ஒரு விஷயத்தையும் கண்ணால் பார்த்தவுடன் அதை கையால் செய்வதற்கு புதன் அனுக்ரகம் வேண்டும். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நன்கு படித்தவர்கள் கைநிறைய சம்பளம் வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம். நம் வாழ்க்கைக்கு அடிப்படையான கல்விச் செல்வத்தை வழங்குபவர் புதன்.

புதன் ஒரு விசித்திரமான கிரகம். செவ்வாயைப் போலவே புதனும் இரு ஆதிபத்திய கிரகமாகும். ஜோதிட ஆச்சர்யமாக மிதுனத்தில் ஆட்சி பெறும் புதன், ஆட்சி வீடான கன்னியில் உச்சம் பெறுகிறார். மீனத்தில் நீசமடைகிறார். அறிவு, ஞானம் இரண்டுக்கும் இவரே அதிபதியாகி படிப்பறிவு, பட்டறிவு இரண்டையும் மனிதனுக்கு உணர்த்துகிறார். விஞ்ஞானம், மெஞ்ஞானம் இரண்டுக்கும் காரணமாகிறார்.

புதனை வணங்கும் முறை

புதன்கிழமை என்றில்லாமல், நவக்கிரக புதன் பகவானை எந்தநாளில் வேண்டுமானாலும் வணங்கலாம். நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் புதன் பகவான் தந்தருளுவார்.

புதன் பகவானை வழிபடுவதற்கு உகந்த கிழமை புதன்கிழமை. புதன் பகவானுக்கு உரிய ராசி - மிதுனம், கன்னி. இதேபோல், புதன் பகவானுக்கான திசை வடகிழக்கு என்றும் புதன் பகவானின் அதிதேவதை மகாவிஷ்ணு என்றும் பிரத்யதி தேவதை ஸ்ரீமந் நாராயணன் என்றும் விவரிக்கிறது ஜோதிட சாஸ்திரம்.

புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது. புதன் பகவானின் வாகனம் குதிரை. பச்சைப்பயறு புதன் பகவானுக்கு விருப்பமான நைவேத்தியம் என்றும் வெண்காந்தள் மலர் கொண்டு அர்ச்சிப்பது சிறப்பு என்றும்  அவருக்கான ஆபரணம் மரகதம் என்றும் விவரிக்கிறது திருவெண்காடு ஸ்தல புராணம்.

பரிகாரம்

ஆறு லக்னங்களில் பிறந்தவர்களில் புதனின் வலு குறைந்து பலவீனமாக இருப்பவர்கள், படிப்பில் மந்தமாக உள்ளவர்கள் சீர்காழிக்கு அருகிலிருக்கும் திருவெண்காடு எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் சுவேதாரண்யேஸ்வரரை புதன்கிழமையில் சென்று வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

சென்னையிலிருப்பவர்கள், போரூரிலிருந்து குன்றத்தூர் செல்லும் வழியிலிருக்கும் கோவூரில் குடிகொண்டிருக்கும் சுந்தரேசுவரரை வணங்கினால், கூடுதலான பலன்களைப் பெறலாம்.

வழிபாட்டுக்கு ஏற்ற நாள், நேரம்

நோய் தீர்க்கும் திருத்தலம் என்று போற்றப்படுகிறது திருவெண்காடு. திருவெண்காடு புதன் பகவானை வழிபட, புதன் பகவான் உச்சம், ஆட்சிபெறும் புரட்டாசி மாதமும், ஆட்சிபெறும் ஆனி மாதமும், புதன் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை வருகின்ற புதன் கிழமைகளில் புதன் ஓரையில், வழிபாட்டுப் பரிகாரம் செய்வது மிக மிக சிறப்பாகும்.

நேரம்

புதன்கிழமையில், புதன் ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் காலை 9 மணி வரையிலும் புதன் பகவானை வழிபடலாம்.

First published:

Tags: Children education, God