உயர்ந்த ஆடைகளை அணிய விரும்பும் மகர ராசி அன்பர்களே! சமுதாயத்தில் நன் மதிப்போடு வாழவே நீங்கள் விரும்புவீர்கள். மனைவியிடம் நல்அன்பை செலுத்துவீர்கள். அவர்களின் நல்ல கருத்துக்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகள் இடத்திலும் அன்பு செலுத்துவீர்கள். குரு பகவான் இது வரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டு இருந்தார். உங்களை எதிர்த்தவர்கள் உங்களை சரண் அடையும் நிலை ஏற்பட்டு இருக்கும். பகைவர்களின் சதி தவிடுபொடி ஆகி இருக்கும். மனதில் துணிச்சல் பிறந்து உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருந்து இருக்கும். வியாபாரம், வணிகம் நல்ல லாபத்தைக் கொடுத்து இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மனநிம்மதியோடு பணியாற்றி இருப்பீர்கள். சிலர் புதிய பதவி பெற்று இருப்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடி இருக்கும். வீடு, மனை வாங்கி இருக்கலாம். இப்போது குருபகவான் 3-ம் இடமான மீன ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.
அதாவது துரியோதனனின் ஜாதகத்தில் 3-ல் குரு இருக்கும் போது அவனது படை தோல்வி அடைந்தது என்பதாகும். அந்த அளவுக்கு மோசமான பலன்கள் உங்களுக்கு நடக்குமோ என்ற அஞ்ச வேண்டாம். ஏனெனில் அந்த சூழ்நிலை வேறு, இன்றைய உங்களின் நிலை வேறு. பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும் போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும்.
அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள்தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. குருவின் பார்வைக்கும் கோடி நன்மை உண்டு. எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும். மேலும் ஜுன் 20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார் மாறாக நன்மையே தருவார்.
குருபகவான் வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மீன ராசிக்குள்ளேயே இருக்கிறார். சனிபகவான் தற்போது உங்கள் ராசியில் இருக்கிறார்.உடல்நலம் பாதிக்கப்படலாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உறவினர்கள் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம். வெளியூர் வாசம் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. அதைக் கண்டு அஞ்ச வேண்டாம். காரணம் சனிபகவான் தான் நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களைப் பார்ப்பார். அந்த வகையில் அவரது 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்துள்ளது.
இந்த பார்வையால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். மேலும் சனிபகவான் மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில்அவர் கெடுபலன்களை தரமாட்டார். சனிபகவான்29-3-2023 அன்று கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சுமாரான நிலையே. அப்போது 10-ம் இடத்துப்பார்வையால் நற்பலனை தருவார். தற்போது ராகு உங்கள்ராசிக்கு 4-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல என்பதால் அலைச்சலையும், சிற்சில பிரச்சினையையும் உருவாக்கலாம். ஆனால் அவரது பின்னோக்கிய 11-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான மிதுனத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்.
இதன் மூலம் முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். கேது உங்கள் ராசிக்கு 10-ம் இடமான துலாம் ராசியில் இருக்கிறார்.இது சிறப்பானது என்று சொல்லமுடியாது. இங்கு அவர் உடல் உபாதைகளை தரலாம். எதிரிகளின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள்களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை.
இனி விரிவான பலனை காணலாம்
குருபகவானின் அனைத்து பார்வைகளாலும், சனியின் 3-ம் இடத்துப் பார்வை பலத்தாலும் நல்ல பொருளாதார வளம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி குவிக்கலாம்.எடுத்த காரியத்தை துரிதமாக முடிப்பீர்கள். அதில் வெற்றியும் காண்பீர்கள். மதிப்பு, மரியாதை, கவுரவம் மேம்படும். ஆனாலும் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். முக்கிய பொறுப்புகளை குடும்ப- த்தில் உள்ள பெரியோர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். குடும்பத்தில் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு, மனை வாங்க அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். குருபார்வையால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ராகு சாதமகற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வையால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் எந்த தடைகளையும் நீங்கள் முறியடித்து வெற்றி காண்பீர்கள். பணவரவு இருக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம்.
உத்தியோகம் வேலையில் கவனமாக இருக்கவும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு தடையில்லை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். குருபார்வையால் மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
ஆசிரியர்களுக்கு வேலையில் அதிக பளுவும் அலைச்சலும் இருக்கும். ஆனாலும் குருவின் பார்வையால் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். வக்கீல்கள் பண விஷயத்தில் கவனம் தேவை. அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந்தேதி வரை சிறப்பாக இருக்கும். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்
மருத்துவர்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியது இருக்கும். வியாபாரிகளுக்கு எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். எப்போதும் அவர்கள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது. ஆனாலும் உங்கள் புத்தியால் அதை முறியடித்து வெற்றி காணலாம். குடும்ப பிரச்சினையை தொழிலில் காட்டாமல் இருந்தால் நல்ல முன்னேறம் அடையலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.
கலைஞர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். போட்டியாளர்கள் வகையில் இடையூறுகள் வரலாம். பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. பிரதிபலனை எதிர்பராமல் உழைக்க வேண்டியதிருக்கும். மனக்குழப்பம் ஏற்படலாம். அரசியல்வாதிகள் எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது சிறப்பு. முக்கிய முடிவு எடுப்பதை தள்ளி போடுங்கள்.
மாணவர்கள் அசாதாரணமாக இருக்க வேண்டாம். குருவின் பார்வையால் மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம்.
விவசாயிகள் அதிக முதலீடு போடும் விவசாய பயிரை தவிர்க்கவும்.அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் போகாது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிபோகும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள் அக்கம் பக்கத்தினர்களின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. கவனம் தேவை. வீட்டினுள் இருந்த சிற்சில பிரச்சினை, உறவினர்கள் வகையில் ஏற்பட்ட மனக்கிலேசம் பொருள் இழப்பு முதலியன குருவின் பார்வையால் மறையும். குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கை நிறைவேறும். உடல் நலம் சுமாராக இருக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
பரிகாரம்: சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை வலம் வரவும். சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். ஆஞ்சநேயர் வழிபாடு உங்கள் வாழ்வில் தடையை அகற்றி முன்னேற்றத்தை கொடுக்கும். பைரவர் வழிபாடு சிறப்பைத் தரும். குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gurupeyarchi