பங்குனி உத்திரம், தைப்பூசம் என்றால் முருகனுக்கு உரியது, சிவராத்திரி என்றால் சிவனுக்கு உரியது, நவராத்திரி என்றால் அம்மனுக்கு உரியது, ஏகாதசி என்றால் பெருமாளுக்கு உகந்தது என்பதை போல் மாசி மகம் எந்த தெய்வத்திற்கு உரியது என்ற கேள்வி எழுகிறது. இதனாலேயே மாசி மகத்தின் மகத்துவம் பலருக்கும் தெரியாமல் உள்ளது. மாசி மகத்தன்று எந்த தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும், வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
புனித நீராடல்: மாசி மகம் தினத்தில் கும்பகோணம் மகாமகம் குளத்தில் நீராடுவது மிகவும் சிறந்தது. முடியாதவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள நீர் நிலைகளில் நீராடி, மகாமகம் குளத்தில் நீராடிய பலனை பெறலாம். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தல் ஏழு தலைமுறை பாவங்களை போக்கக் கூடியதாகும்.
சிவன்: மாசி மக திருநாளில் அனைத்து திருக்கோவில்களிலும், தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறுகிறது. சிவபெருமான் வருணனுக்கு சாப விமோசனம் அளித்ததும் இந்நாளில் தான். இதனால் சிவனை வழிபடுவதற்கும் உகந்த நாளாகிறது மாசிமகம்.
அம்மன் வழிபாடு: உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. அதனால் பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. சக்தி வழிபாட்டிற்குரிய நாளாகும்.
முருகன் வழிபாடு: தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசிமகம் தான். இதனால் முருகனை வழிபடுவதற்கும் சிறப்பான நாளாக மாசி மகம் அமைகிறது.
பெருமாள் வழிபாடு: பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான். இதனால் இந்நாள் பெருமாளை வணங்குவதற்குரிய நாளும் ஆகிறது. அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கான சிறப்பு நாளாக மாசி மகம் அமைகிறது. இந்த நன்னாள் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.
கேது பகவான் வழிபாடு: ஞானமும், முக்தியும் அளிக்கும் கேது பகவான் மகம் நட்சத்திரத்திற்கு அதிபதியாவார். எனவே இந்நாளில் கேது பகவானை வழிபட அறிவாற்றல் சிறக்கும் என்பதால் குழந்தைகளும், பெரியவர்களும் நவகிரக சந்நிதியில் இருக்கும் கேது பகவானுக்கு வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யலாம்.
முன்னோர்கள் வழிபாடு: மகம் நட்சத்திரத்தை ‘பித்ருதேவா நட்சத்திரம் என்றும் அழைப்பார்கள். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மையைத் தரும். மாசி மகம் அன்று முறைப்படி விரதமிருந்து வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெறுவோம்.
குல தெய்வ வழிபாடு: மாசி மகத்தன்று குல தெய்வத்தை வழிபடுவதும், தரிசிப்பதும் மகத்தான பலன்களை அள்ளித் தரும்.
மேலும் மகாவிஷ்ணு, உமாமகேசுவரர் மற்றும் முருகன் ஆகிய மூன்று தெய்வங்களையும் வழிபட்டால் இந்தப் பிறப்பு மட்டுமல்லாமல் முன் ஜன்மங்களில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகியோடும். ஆக மொத்தம் மாசி மகம் அன்று அனைத்து தெய்வங்களையும் வழிபடலாம். இந்த வருடம் மாசி மகம் திருநாளானது மார்ச் 06 ம் தேதி திங்கள் கிழமையன்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Masi Magam