ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருக்கு நல்ல நிர்வாகத் திறனை தரக்கூடிய கிரகம் செவ்வாய் ஆவார். இந்த செவ்வாய் உடலில் ரத்தத்தை குறிப்பவர். நெருப்பின் சுவரூபம். சிலர் முருகப் பெருமானின் ஸ்வரூபம் என்றும் இவரை சொல்கின்றனர். இவரது நிறம் நல்ல சிவப்பு. இன்று விஞ்ஞானிகள் ராக்கெட் அனுப்பி செவ்வாயின் நிறம் சிவப்பு என்று கண்டு பிடித்து உள்ளனர். எனினும், நமது சித்தர்கள் இதனை அக்காலத்திலேயே சொல்லி விட்டனர்.
மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதி செவ்வாய் ஆவார். இந்த செவ்வாய் மகரத்தில் உச்சம் பெறுவார். கடகத்தில் நீச்சம் பெறுவார். சிம்மம் மற்றும் மகர ராசிக்கு செவ்வாய் யோகத்தை செய்யக் கூடிய கிரகம் ஆவார். செவ்வாய்க்கு உரிய எண் 9. செவ்வாய்க்கு உரிய தெய்வம் சுப்பிரமணியர்.
ஒருவரது ஜாதகத்தில் சுப கிரகமாக இருந்து செவ்வாய் வலிமையாக இருந்து விட்டால்!... அந்த ஜாதகர் வெற்றி மேல் வெற்றியை குவிப்பார். செவ்வாய் எந்தந்த ஸ்தானங்களில் அமர்ந்து இருந்தால்... என்ன மாதிரியான யோக பலனை அளிப்பார் என்பதனை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க...
தனுசு, சிம்மம், மேஷம், கடகம், மகரம் ஆகிய ஏதாவது ஒன்று லக்கினமாக இருந்து, அதில் செவ்வாயும் இருந்து, சுய வர்க்கப்பரல் களும் 4 ற்கு மேல் இருந்தால், ஜாதகன் ஆட்சியாளனாக இருப்பான் அல்லது அதிகாரம் மிக்கவனாக இருப்பான். ஆட்சியாளன் என்றவுடன் இந்தியாவின் பிரதமர் பதவி வரும் என்று நினைக்க வேண்டம். கிராம முன்சீப் பதவி அல்லது நகர சேர்மன் பதவி கூட ஆட்சிப் பதவி தான்.
இரண்டாம் வீட்டிலோ அல்லது ஆறாம் வீட்டிலே செவ்வாய் அமர்ந்திருந்து சுய வர்க்கத்திலும் ஆறு பரல்களைக் கொண்டிருந்தால் ஜாதகனுக்கு வாழ்க்கையின் எல்லா செளகரியங்களும், சுகங்களும் கிடைக்கும். அதே நேரத்தில் ஏராளமான விரோதிகளும் இருப்பார்கள்.
செவ்வாய் ஜாதகத்தில் நீசம் அடைந்ததுடன், 6ஆம் வீட்டிலோ அல்லது 8ஆம் வீட்டிலோ அல்லது 12ஆம் வீட்டிலோ அமர்ந்திருந்து உடன் வலுவில்லாத சந்திரனும் கூட்டணி போட்டிருந்தால் ஜாதகனுக்கு உடன் பிறப்புக்கள் இருக்காது. அப்படியே ஒரிருவர் இருந்தாலும் ஜாதகனுக்கு அவர்களுடன் நல்ல உறவு இருக்காது.
மூன்றாம் இடத்தில் செவ்வாயும், சனியும் கூட்டாக இருந்து, செவ்வாய் சுயவர்க்கத்தில் முன்று பரல்களுடன் அல்லது அதற்குக் கீழான பரல்களுடன் இருந்தால், ஜாதகன் தன் உடன் பிறப்பைப் பறிகொடுக்க நேரிடும். எனினும், 27 கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட தோஷங்கள் நீங்கும்.
செவ்வாய் பதினொன்றாம் அதிபதியாக இருந்தால், அவருடைய திசையில் ஜாதகனுக்கு ராஜ யோகங்கள் கிடைக்கும்.
லக்கினம் செவ்வாயின் வீடுகளில் ஒன்றாக இருந்து அதாவது மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்து, லக்கினம் அதன் சுய வர்க்கத்தில் 7 பரல்களைப் பெற்றிருப்பதோடு, 7ஆம் வீட்டில் செவ்வாய் இருந்து அதன் பார்வை தன் சொந்த வீட்டில் விழுந்தால் ஜாதகன் சர்வ அதிகாரியாக இருப்பான். உலகில் சில சர்வாதிகாரிகளின் ஜாதகம் இத்தகைய அமைப்பைக் கொண்டது.
ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாகவோ அல்லது 1,4,9,10ஆம் வீடுகளில் அமர்ந்திருந்து தனது சுய வர்க்கத்திலும் 8 பரல்களைப் பெற்றிருந்தால் ஜாதகன் கோடீஸ்வரனாக உயர்வான். தன் திறமை மற்றும் செயல் ஆற்றும் தன்மையால் பெரும் செல்வம் ஈட்டுவான்.
மற்றபடி, லக்கினத்திற்கு எந்த பாவங்களில் செவ்வாய் இருந்தால் எந்த மாதிரியான பலனை தருவார் என்பதை தெரிந்திக்கொள்ளலாம் வாங்க...
1. லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் கோபக்காரன். எடுத்தற்கெல்லாம் சட்டென்று கோபம் வரும்! உக்கிரமானவன். சிலருக்கு அடிக்கடி உடற் காயங்கள் ஏற்படும். சிலருக்கு குறைந்த ஆயுளிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டுவிடும். ஒரு வியாதி போனால் இன்னொரு வியாதி கதைவைத் திறந்து கொண்டு உடனே வரும்! ஜாதகன் சலனபுத்திக் காரணாக இருப்பான். தீரனாகவுன் இருப்பான் சிலர் வன்கன்மையாளராகவும் இருப்பார்கள்.
2. இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்வியும் குறைந்த அளவே இருக்கும். சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள். வாக்குவாதம் செய்பவர்கள் (argumentative) செவ்வாயின் இந்த அமைப்பு, கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல! இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் அது செல்வத்திற்குக் கேடானது. செல்வம் இருக்காது. அப்படியே தேடிப் பிடித்தாலும் தங்காது அல்லது நிலைக்காது!
3. மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் பிடிவாதக்காரன். சாதனையாளன்.செல்வச்சூழல்களை அனுபவிக்கக்கூடியவன். புகழ் பெறுவான். எல்லா வசதிகளும் வந்து சேரும். தனித்தன்மை வாய்ந்தவன்.நீண்ட ஆயுளை உடையவன். தர்ம, நியாயங்கள், நன் நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டுச் சிலர் வாழ்வார்கள்.
4. நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: உறவுகள், வீடு வாசல், சொத்துக்கள், தாய்ப் பாசம், வாகன வசதி போன்றவைகள் இல்லாத அல்லது கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக ஜாதகன் இருப்பான். இது அத்தனையும் எனக்கு இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் இந்த அமைப்பின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை பட்டுக் கொண்டிருக்கும் ஜாதகன் பெண்களின் மேல் அதீதமான ஈர்ப்பு உள்ளவன். சிலர் பெண்களுக்காக உருகி கோதாவரி ஆறு போல ஓடக்கூடியவர்களாக இருப்பார்கள். மனப் போராட்டங்கள் மிகுந்த ஜாதகம்.
5. ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும். வாழ்க்கை வசதிகள், சொத்துக்களில் குறைபாடுகள் இருக்கும். அல்லது சொத்து, சுகம் இல்லாமல் இருக்கும். சிலர் மனம் வெறுக்கும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். தர்ம, நியாயங்கள், நன்நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டு வாழ நேரிடும். சிலர் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர் எடுத்ததெற்கெல்லாம் கோபம் கொள்ளுகின்ற குணத்தை உடையவர்களாக இருப்பார்கள்.
6. ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: நல்ல கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும். ஜாதகன் ஊராக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, எதிரிகளை துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பான். மனதில் பயமே இருக்காது. சிலருக்கு அதீத பெண் ஆசை இருக்கும் அதாவது அதிகமான காம உணர்வுகள் இருக்கும். எப்போதும் காம சிந்தனைகள் மேலோங்கி இருக்கும். சிலர் தங்கள் முயற்சியால் மேன்மை அடைவார்கள். புகழ்பெறுவார்கள்.
மேலும் படிக்க... விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் தத்துவங்கள்...
7. ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: தர்ம நியாயம் இல்லாத காரியங்களைச் செய்பவான ஜாதகர் இருக்கலாம். சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் மேற்கண்ட தீய பலன்கள் குறையும். சிலருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் போகலாம். சண்டைபிடிக்கும், அல்லது சண்டை போட்டு சட்டையைப் பிடிக்கும் மனப்பான்மை இருக்கும் அநேக நோய்கள் ஒவ்வொன்றாகத் தேடிவரும். மனையாளும் அதனால் பாதிக்கப்படுவாள். சிலர் கல்மனதுக்காரர்களாக இருப்பார்கள்.
8. எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: உடலும், உள்ளமும் அவ்வளவு நலமாக இருக்க வாய்ப்பு இல்லை. சொத்து சேர்க்க அதிகம் போராட வேண்டி இருக்கும். சிலருக்கு விபத்துக்கள் கூட ஏற்படலாம். தர்ம, நியாயங்களைப் பற்றிக் கவலைப்படாத மனதைக் கொண்டிருப்பான்.
9. ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் : தந்தையோடு நல்ல உறவு இருக்காது. தந்தை மேல் அன்பு பாசம் இருக்காது. ஜாதகன் அதிரடியான ஆளாக இருக்கலாம். ஜாதகர் கண்களுக்குப் புலப்படாத கலைகளில் ஆர்வம் கொண்டு இருக்கலாம். அதில் தேர்ச்சியும் பெற்று காணப்படலாம்.
10. பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் : பொதுவாகப் 10 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பது என்பது அதிகமான நன்மைகளைத் தான் செய்யும். அதிலும், குரு போன்ற சுப கிரக பார்வை பெற்று இருந்தால்... ஜாதகர் மிக்க கடமை உணர்ச்சியைக் கொண்டு இருப்பார். சொத்து, சுகம், புகழ் என அனைத்துமே ஜாதகருக்கு கிடைக்கப்பெறும்.
மேலும் படிக்க... இன்று மகாசங்கடஹர சதுர்த்தி விரதம்...
11. பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் : அவ்வப்போது திடீர் லாபங்கள் கூட மகிழ்ச்சி தரும். எனினும் கடகம், சிம்மம் ஆகிய லக்கினத்தில் பிறந்து 11 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பது என்பது மிகவும் சிறப்பை தரக்கூடியது. சமூகத்தில் அந்தஸ்தை தரும்.
12. பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் : சிலருக்கு கண் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். பிரயாணங்கள் கூட அதிக அளவில் அலைச்சலைத் தரும். சின்னச் - சின்ன பொருளாதார இழப்புகள் கூட ஏற்படலாம்.
மேலும் படிக்க... சகல நலன்களையும் அளிக்கும் சப்த கன்னியர் வழிபாடு!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.