தமிழ் மாதங்களில் 11வது மாதமாக வரும் மாசி மாதம் இறைவழிபாட்டிற்கான மாதமாக விளங்குகிறது. இந்த மாசி மாதத்தில் மகா சிவராத்திரிக்கு அடுத்த மிகவும் சிறப்புவாய்ந்த தினமாக வருவது மாசி மகம். மாசி மாதம் பௌர்ணமி திதியுடன் வரும் மகம் நட்சத்திர நாளே 'மாசி மகம்' என்கிறோம். அதாவது, மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு என அனைத்திலும் புண்ணிய நதியாம் கங்கை கலந்திருப்பதாக ஐதீகம். இதனால், மாசி மகத்தன்று புனித நீராடுவது ஏழு ஜென்ம பாவங்களை போக்கும் என நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் நடத்தப்படுகிறது. இதையே வட இந்தியாவில் கும்பமேளாவாக கொண்டாடுகின்றனர்.
புராணக்கதை
ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரமே, 'மாசி மகம்' என்று கொண்டாடப்படுகிறது. ஏனெனில் அந்த நாளில்தான் பார்வதி தேவி, தக்கனின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவபெருமானின் சக்தியாகிய தேவியே, தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று தக்கன் ஆசைக் கொண்டான். இதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான்.
அந்த தவத்தின் பயனாக உமாதேவி, தக்கனின் மகளாக அவதரித்தாள். அவளுக்கு ‘தாட்சாயிணி' என்று பெயரிட்டு வளர்த்து வந்த தக்கன், தன் மகளை சிவபெருமானுக்கே திருமணமும் செய்து வைத்தான். அன்னை உமா தேவி அவதரித்த நாள் மாசி மகம் என்பதால் அந்த நாள் புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது.
Also see... மாசி மாத சங்கடஹர சதுர்த்தி... மஞ்சள் கயிறு மாற்றினால் பெண்களுக்கு மங்கலம் உண்டாகும்..!
சிம்மராசியில் சந்திரன்
மாசி மாதத்தில் சந்திரன் சிம்மராசியில் மகம் நட்சத்திரத்தில் நுழையும் நாளான, மாசி மகம் அன்று, ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். மக நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் கேது பகவான். இவர் ஞானத்தையும், முக்தியையும் அருள்பவர். செல்வ வளம் சேரும் யோகத்தை வழங்கக் கூடியவர். மாசி மக நாளை, ‘கடலாடும் நாள்' என்றும், 'தீர்த்தமாடும் நாள்' என்றும் அழைப்பார்கள்.
மாசி மகம் தோன்றிய கதை
ஒரு முறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதில் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். அதில் இருந்து விடுபட வருணன், சிவபெருமானை நினைத்து பிரார்த்தித்தான். இந்த நிலையில் உலகில் மழையில்லாமல் வறட்சியும், பஞ்சமும் நிலவியது. இதனால் அனைத்து உயிர்களும் துன்பம் அடைந்தன.
உடனே தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சந்தித்து முறையிட்டனர். வருண பகவானை விடுவிக்கும்படி ஈசனிடம் வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான். வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசி மக திருநாளாகும்.
Also see... மாசி மாதம் மகத்துவம் நிறைந்த மாதமாகும்..!
விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவ பெருமானை வணங்கினார். பின்னர் ஈசனிடம், 'இறைவா! நான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடலில் கிடந்தபோது, நீருக்குள் இருந்தபடியே உங்களை வணங்கினேன். அதன் பயனாக எனக்கு விடுதலை கிடைத்தது. அதே போல் மாசி மகத் தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி, இறைவனை வழிபடும் அனைவருக்கும் அவர்களின் பாவங்களையும், பிறவி துன்பங்களையும் நீக்கி அருள் செய்ய வேண்டும்' என்று கேட்டார்.
சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அன்று முதல் தீர்த்தமாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. மாசிமகத் தன்று பிரசித்திப் பெற்ற புண்ணிய தலங்களில் ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.
Also see... மாசிமகம் 2023 எப்போது?.. நேரம், தேதி குறித்த தகவல்கள்..!
விரதம் இருக்கும் முறையும் பலன்களும்
மாசி மகம் அன்று காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். பின்னர் உலர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு சிவ சிந்தனையுடன், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மதியம் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு விட்டு, இரவு பால், பழம் சாப்பிடலாம். அன்றைய தினம் முழுவதும் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாமல், இறைவனை நினைக்கும் ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும். தேவார, திருவாசக பாடல்களை பாராயணம் செய்யலாம். இந்த விரதத்தை கடைப்பிடித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Masi Magam