அமாவாசைகளில் ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்கள் முக்கியமானவையாகும். வருடம் முழுவதும் அமாவாசை நாட்களில் விரதம் இருந்து, பித்ரு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இந்த மூன்று அமாவாசைகளில் விரதம் இருந்து பித்ருக்களை வழிபாடு செய்தாலே நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டில் தை அமாவாசையானது ஜனவரி 21ஆம் தேதி 2023 அன்று சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அமாவாசை திதியானது அதிகாலை 04.25 மணிக்கு துவங்கி, ஜனவரி 22ஆம் தேதி அதிகாலை 03.20 மணி வரை உள்ளது. அமாவாசை திதியானது காலையிலேயே துவங்கி விடுவதால் காலையிலேயே நீராடி முன்னோர்களை வணங்குவது நல்லது.
அமாவாசையின் சிறப்புகள்
மகாளாய அமாவாசை என்று அழைக்கப்படும் புரட்டாசி அமாவாசை முன்னோர்களான பித்ருக்கள் பூலோகம் வந்தடைந்து, மகாளய பட்சகாலத்தில் தங்கி இருந்து அருள் புரிவார்கள். அதே போல தை அமாவாசை அன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவார்கள் என்பது ஐதீகம்.
திதி எப்போது கொடுக்க வேண்டும்?
நாள் முழுவதும் அமாவாசை திதி இருந்தாலும் காலை பொழுதிலேயே தர்ப்பணம் கொடுக்க வேண்டும். உச்சிபொழுதிற்குள் பிதுர் காரியங்களை நிறைவேற்றி, எள்ளும் தண்ணீரும் இரைத்து, காகத்திற்கு உணவிட வேண்டும். உச்சி பொழுதிற்கு பிறகு தர்ப்பணம் கொடுக்க கூடாது.
தை அமாவாசை தர்ப்பணம் எங்கெல்லாம் கொடுக்கலாம்?
பொதுவாக ஓவ்வொரு அமாவாசை தினங்களிலும் தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். அப்படி தர்ப்பணம் கொடுப்பவர்கள் நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கொடுப்பது மிகவும் விசேஷமானது. பொதுவாக தர்ப்பணம், சிரார்த்தம் என இரண்டு உண்டு. இதில் வித்தியாசமும் உண்டு.
தர்ப்பணம் என்றால் என்ன?
அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்துச் செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம். தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படைத்து விட்டு, சாப்பிடுவது, பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் அடங்கும்.
சிரார்த்தம்:
ஒருவர் இறந்தால் அவரை நினைத்து ஒவ்வொரு ஆண்டும், அவர் இறந்த அதே திதியில் நாம் வீட்டில் அல்லது கோயிலில் சென்று செய்யும் வழிபாடு சிரார்த்தம் எனப்படும். இதில் பிண்டம் வைத்து வழிபடுவது சிறந்தது. குறிப்பாக அவர் இறந்த நாளின்போது வரும் திதியில் செய்வது சிரார்த்தம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.
யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?
தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக இந்த விரதத்தை பெண்கள் மேற்க்கொள்ளக் கூடாது. ஆனால் கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thai Amavasai, Thai Month