சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் ஜெயராமன் (வயது 51). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி மது குடித்துவிட்டு வேலைக்கு வராமல் இருந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 30 நாட்களுக்கு மேல் வேலைக்கு வராமல் இருந்துள்ளார் ஜெயராமன் .
இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் ஆகும். இவரது மனைவி பெயர் மாலா.
இதனிடையே கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜெயராமனை காணவில்லை என அவரது மனைவி மாலா சேலம் மாநகர துணை கமிஷனர் லாவன்யாவிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இந்த புகார் மனுவை விசாரித்த துணை கமிஷனர் லாவண்யா ஜெயராமன் குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்தார். இதில் டவுன் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த விசாரணையில் ஜெயராமன் அவரது நண்பர் விஜயகுமார் (வயது 49) என்பவருடன் மதுகுடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தது தெரிய வந்தது. மேலும் விஜயகுமாரும் ஜெயராமன் மாயமான நாளிலிருந்து மாயமாகி இருப்பது தெரியவந்தது. எனவே விஜயகுமாரை போலீசார் தேடி வந்தனர்.
விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்:
இந்த நிலையில் நேற்று விஜயகுமார் அவரது வழக்கறிஞர் ஒருவர் மூலம் சேலம் உதவி கமிஷனர் வெங்கடேசன் முன்பு ஆஜர் ஆனார். அவரிடம் நடத்திய விசாரணையில். கடந்த டிசம்பர் மாதம் ஜெயராமனும் விஜயகுமாரும் சேலம் மாவட்டம் கருமந்துறைக்கு சென்று மது குடித்துள்ளனர். பின்னர் அங்கேயே சுற்றி திரிந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 4- ம் தேதி இருவரும் சேலம் திரும்புவதற்காக மலைப்பாதையில் வந்துள்ளனர். அப்போது போதையில் இருவரும் காரிப்பட்டி அருகே உள்ள செல்லியம்பாளையத்தில் உள்ள வனப்பகுதியில் விழுந்து விட்டதாகவும் ஜெயராமனை எழுப்பியபோது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் இதன் பிறகு ஜெயராமனின் செல்போனை மட்டும் எடுத்துக் கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் சேலம் திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அனாதை பிணமாக புதைக்கப்பட்ட போலீஸ்காரர்
இதனை அடுத்து தனிப்படை போலீசார் காரிப்பட்டி காவல் நிலையம் சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி செல்லியம்பாளையம் காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் மர்மமாக இறந்து கிடந்தார். சடலத்தை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்தோம். 15 நாட்களுக்கு மேலாக யாரும் சடலத்தை கேட்டு வராததால் சேலம் நான்கு ரோடு அருகே உள்ள இடுகாட்டில் புதைத்து விட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர் .
தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்தது ஜெயராமன் என்றும் குடிபோதையில் அவர் இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்தது. பின்னர் இது குறித்து போலீசார் ஜெயராமனின் மனைவி மாலாவை அழைத்து ஜெயராமன் இறந்து விட்டது குறித்து தெரிவித்தனர். மது போதையால் இறந்தாரா அல்லது ஜெயராமனின் இறப்பிற்கு அவரது நண்பர் விஜயகுமார் காரணமா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Salem, Tamil News