சேலத்தில் கந்துவட்டி கொடுமையால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 65). இவரது மனைவி சாந்தி (55). இவர்களுக்கு ராமகவுண்டர், ராமவேல் என்ற 2 மகன்களும், தமிழரசி என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் ராமகவுண்டர் தனியார் கல்லூரி ஒன்றில் ஓமியோபதி டாக்டராகவும், ராமவேல் ஆட்டோ ஓட்டியும் வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை ராமவேல் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து கீழ்தளத்தில் உள்ள பெற்றோரின் அறை பார்த்தபோது வாயில் நுரை தள்ளியப்படி தனித்தனி கட்டிலில் பெற்றோர் இறந்து கிடந்ததை பார்த்து ராமவேல் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அழகாபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அழகாபுரம் போலீசார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட ராஜேந்திரன், சாந்தியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கணவன்-மனைவி தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜேந்திரன் கடந்த 2012-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.15 லட்சம் கடன் வாங்கி வீட்டை கட்டியுள்ளார். அதன்பிறகு அவர் அந்த பணத்துக்குரிய வட்டி கட்டவில்லை. இதனால் வட்டியுடன் சேர்த்து ரூ.18 லட்சம் வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக 2018-ம் ஆண்டு வங்கி சார்பில் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் அதே பகுதியை சேர்ந்த நடேசன் (75) மூலம் உலகநாதன் (47) என்பவரிடம் ரூ.19 லட்சம் கடன் வாங்கி வங்கி கடனை அடைத்துள்ளார். ஆனால் அவரால் உலகநாதனிடம் பெற்ற கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை. தற்போது கந்து வட்டி சேர்த்து ரூ.40 லட்சத்தை உடனே தருமாறு கடன் கொடுத்தவர்கள் ராஜேந்திரனை தொடர்ந்து மிரட்டி வீட்டை விற்று கடனை அடைக்குமாறு தொந்தரவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் மிகவும் மன உளைச்சலில் காணப்பட்ட ராஜேந்திரன் தனது மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் இரவு இருவரும் தண்ணீரில் பூச்சு மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த நிலையில் கந்துவட்டி கேட்டு ராஜேந்திரனை தொடர்ந்து தொந்தரவு செய்ததாக உலகநாதன், நடேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: திருமலை தமிழ்மணி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Salem