சேலத்தில் உடலில் ஏற்பட்ட அரிப்பு காரணமாக தனியார் மருந்தகத்தில் ஊசி போட்டு கொண்ட கூலித் தொழிலாளி சிறிது நேரத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே விளாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சின்னப்பன் (வயது 52). இவர் வெள்ளாளபட்டியில் உள்ள தனது மகள் பிருந்தா என்பவரது வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றுள்ளார். சின்னப்பனுக்கு உடலில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டு வந்ததாகவும் அதற்காக மருத்துவரிடம் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
இன்னிலையில் சின்னப்பனிற்கு உடலில் மீண்டும் அரிப்பு ஏற்பட்டதால் வெள்ளாளப்பட்டி அருகே சேகடிப்பட்டி சேர்ந்த பூபதி என்பவருடைய மருந்தகத்திற்கு சென்று மாத்திரை கேட்டுள்ளார். அப்போது மருந்தகம் நடத்தி வருபவர் சின்னப்பனுக்கு ஊசி போட்டு உள்ளார். ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே சின்னப்பன் மருந்தகத்தை விட்டு வெளியே வந்தவுடன் மயங்கி விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பூபதி மற்றும் அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சிற்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவரை பரிசோதித்தபோது சின்னப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டதும் பூபதி அங்கிருந்து தப்பியோடினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சின்னப்பனின் உடலை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மருந்தகத்திற்கு பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அன்புச் செழியன் தலைமையில் வருவாய் துறையினர் சீல் வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான மருந்தக உரிமையாளர் பூபதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Death, Medical shop, Salem