சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் தெற்கு பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் மகன் கணேசன். இவர் நிலம் வாங்கி விற்கும் கமிஷன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நிலம் ஒன்று வாங்குவதற்காக தான் சேமித்து வைத்திருந்த இரண்டு கோடி ரூபாய் பணத்தை பாதுகாப்பு கருதி சாமியார் கிணறு பகுதியில் உள்ள குடும்ப நண்பரான விவசாயி லோகநாதன்(45), என்பவரிடம் கடந்த 19ம் தேதி இரண்டு பைகளில் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் கொடுத்து வைத்துள்ளார்.
பின்னர் ஓரிரு நாட்களில் பணத்தை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். நிலம் வாங்குவதற்கு காலதாமதம் ஆனதால் பணம் லோகநாதனிடமே இருந்துள்ளது.
இதையும் படிங்க : மாண்டஸ் புயல்: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு
கடந்த வியாழக்கிழமை லோகநாதன் தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள கோவிலுக்கு பௌர்ணமி பூஜைக்காக சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக கணேசனிடம் தெரிவித்துள்ளார்,
இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர் லோகநாதன் வீட்டிற்கு சென்று மீதம் இருந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை பெற்று கொண்டார். பின்னர் லோகநாதனும், ரியல் எஸ்டேட் அதிபர் கணேசனும் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். பின்னர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சந்தேகமடைந்த தனிப்படை போலீசார் லோகநாதன் வீட்டிலும், அவரது வீட்டின் பின்புறம் உள்ள விவசாய தோட்டங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, லோகநாதனுக்கு சொந்தமான கரும்பு காட்டின் நடுவே ஒரு கோடி ரூபாய் பணத்துடன் டிராவல்ஸ் பேக்கையும் போலீசார் மீட்டனர்.
இதனையடுத்து, ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் லோகநாதன் மற்றும் இரண்டு கோடி ரூபாய் ரொக்க பணத்தை கொடுத்து வைத்திருந்த கணேசன் உள்ளிட்ட இரண்டு பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க : WATCH - வணங்க சென்ற பாஜக எம்பி.. எட்டி உதைத்த பசு.. கோமாதா பூஜையில் பரபரப்பு
விசாரணையில், திடுக்கிடும் சம்பவம் வெளியானது. அதில் கணேசன் கொடுத்து வைத்திருந்த இரண்டு கோடி ரூபாய் பணத்தில் ஒரு கோடி ரூபாய் பணத்தை கரும்பு காட்டில் மறைத்து வைத்து கொண்டு மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ஒரு கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து லோகநாதனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Salem