பசும்பொன் தேவர் தங்க கவச விவகாரம் தொடர்பாக பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014ம் ஆண்டு 3.7 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார். அது மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், அதிமுகவின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தவரை ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவின்போது அவரும், தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாவும் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு கவசத்தை பெற்று, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் வங்கியில் ஒப்படைப்பர்.
இதையும் படிங்க : தனுஷ்கோடிக்கு சுற்றுலா போறீங்களா..! மறக்காம இதை எல்லாம் பார்த்துட்டு வாங்க..!
அதிமுக உட்கட்சி பூசல்களால் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தங்க கவசத்துக்கு உரிமை கோருவதற்காக கடந்த செப்ட்ம்ப்ர் 16 அன்று எழுத்துப்பூர்வ கடிதத்தை எடப்பாடி பழனிசாமி சார்பில் திண்டுக்கல் சீனிவாசன் நிர்வாகத்திடம் அளித்திருந்தார்.
பின்னர் செப்டம்பர் 30 அன்று வங்கிக்கு நேரில் வந்து கவசத்திற்கு உரிமை கோருவதற்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். தொடர்ந்து, அக்டோபர் 3 அன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், தர்மர் ஆகியோரும் தங்க கவசத்திற்கு உரிமை கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.
இரு தரப்பினரில் யாருக்கு சட்ட ரீதியான உரிமை இருக்கிறது என ஆராய்ந்து வங்கி நிர்வாகம் எடுக்கும் முடிவு ஒருபுறம் இருந்தாலும், தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாவின் முடிவும் இந்த விவகாரத்தில் முக்கியமானது.
இந்நிலையில், அவருடைய ஆதரவு இதுவரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருந்ததாக கூறப்படும் நிலையில், அவரை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவு தருமாறு எடப்பாடி பழனிசாமி தரப்பு கேட்கவுள்ளது. அப்படி அவர் ஆதரவு அளித்தால் எடப்பாடி தரப்புக்கு வங்கி நிர்வாகம் தங்க கவசத்தை ஒப்படைக்க முன்வரலாம்.
இதையும் படிங்க : ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை இந்தியாவின் முக்கிய சிவாலயங்கள் இதோ..!
பசும்பொன் சென்று அறங்காவலரை நேரில் சந்தித்து பேச முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த தென் மாவட்ட நிர்வாகிகள் முடிவு செய்தையடுத்து, இன்று காலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
செய்தியாளர்: சர்க்கரை முனியசாமி - கமுதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: EPS, Muthuramalinga Thevar, R.B.Udhayakumar, Ramanathapuram