இராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்தவர் அசோக்குமார். இந்நிலையில் அசோக்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் விசாரணை இராமநாதபுரம் சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இந்த விசாரணை தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் இராமநாதபுரம் கேணிக்கரை போலீசாரிடடமிருந்து அசோக்குமார் தற்கொலை தொடர்பான ஆவணங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருள்கள் விவரங்களை கேட்டுள்ளனர்.
அப்போது அசோக்குமாரின் செல்போன் மட்டும் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் தகவலின் பேரில் இராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அசோக்குமாரின் செல்போனை ஒருவர் பயன்படுத்துவது தெரியவந்தது. இதனையடுத்து, செல்போன் பயன்படுத்திய நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், ஒரு கடையில் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அக்கடையில் விசாரித்தபோது இராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்திலிருந்து காவல்துறையினர் இருவர் தன்னிடம் விற்பனை செய்ததாக அதிர்ச்சித் தகவலை தெரிவித்தனர். ரூ.2 ஆயிரத்திற்கு காவலர்கள் அசோக்குமாரின் செல்போனை காவல் நிலையத்தில் இருந்து திருடி விற்பனை செய்து பணத்தை பகிர்ந்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கடந்த 3 நாட்களாக விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின் முடிவில் மேற்கண்ட காவல் நிலையத்தில் எழுத்தளராக பணியாற்றி வரும் சுரேஷ் மற்றும் தலைமை காவலர் கமலக்கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ் பி உத்தரவிட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை
மேலும் இதுபோன்ற சம்பவத்தில் போலீசாரே ஈடுபட்டதை தொடர்ந்து மேற்கண்ட இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவிட்டுள்ளார். இராமநாதபுரத்தில் போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருந்த செல்போனை அந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களே திருடி விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் தகராறு ஒன்றில் கைப்பற்றப்பட்ட நகைகளை எடுத்து விற்பனை செய்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாகவும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.