முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் தேர் சாய்ந்து விபத்து - 5 பேர் காயம்

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் தேர் சாய்ந்து விபத்து - 5 பேர் காயம்

புதுக்கோட்டை தேர் விபத்து

புதுக்கோட்டை தேர் விபத்து

தேர் அடித்தளம் முறையாக அமைக்கப்படாததாலையே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அடித்தளத்தில் உள்ள கிளாம்புகள் முறையாக இல்லை என்றும் வெள்ளோட்டம் நடத்தப்படாமல் தேரோட்டம் நடத்தியதால் தான் விபத்து ஏற்பட்டது.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள பழமை வாய்ந்த பிரகதம்பாள் திருகோகர்னேஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்ற நிலையில் பிரகதாம்பாள் எழுந்தருளிய தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட திருக்கோகர்ணத்தில் பிரகதம்பாள் திருக்கோகர்னேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலானது மன்னர் காலத்து பழமை வாய்ந்த கோயில். புதுக்கோட்டை மாவட்ட கோவில்களில் முதன்மை கோயிலாகவும் இக்கோயில் திகழ்கிறது.

இந்நிலையில் இந்த கோவிலில் ஆடித்திருவிழா கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்றால் நடைபெறாமல் இருந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் விழாவின் ஒன்பதாவது நாளான இன்று ஆடிப்பூர தேரோட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் 200க்கும் மேற்பட்டோர் குழுமி இருந்த நிலையில் காலை 8. 50 மணிக்கு முதல் சப்பரத்தில் விநாயகரும், இரண்டாவது சப்பரத்தில் முருகனும், மூன்றாவது தேரில் பிரகதம்பாளும், நான்காவது தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளிருந்தனர்.

தேரோட்டம் தொடங்கி இரண்டு அடி இழுத்தவுடன் பிரகதாம்பாள் எழுந்தருளியிருந்த தேர் எதிர்பாராத விதமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த தேர் விபத்தில் ஏழு பேர் சிக்கிக்கொண்ட நிலையில் அவர்களை அருகே இருந்தவர்கள் மீட்டனர். இதில் 5 பேர் காயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறை வாகனங்கள் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் ஐந்து பேர் மயக்கமுற்ற நிலையில் அவர்கள் அதே இடத்திலேயே முதலுதவி செய்து பின்னர் வீடு திரும்பினர்.

இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை பார்வையிட்டு பின்னர் தேர் விபத்துக்குள்ளான பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இந்த அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா ஆகியோர் விபத்துக்குள்ளான தேரை பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில் தேர் விபத்தான சம்பவம் குறித்து ஆட்சியர் கவிதா ராமு காவல்துறையினர் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரியிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

' isDesktop="true" id="779480" youtubeid="-s3SqE-61pE" category="pudukkottai">

மேலும் இந்த விபத்தானது தேர் அடித்தளம் முறையாக அமைக்கப்படாததாலையே நிகழ்ந்ததாகவும் அடித்தளத்தில் உள்ள கிளாம்புகள் முறையாக இல்லை என்றும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு தேரோட்டம் நடைபெறும் பொழுது வெள்ளோட்டம் பார்த்து தேர்முறையாக பழுதில்லாமல் உள்ளதா என்று ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் வெள்ளோட்டம் நடத்தப்படாமல் தேரோட்டமானது நடைபெற்ற நிலையில் எதிர்பாராத விதமாக தேர் விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், இரண்டு அடி கூட தேர் வராத நிலையில் துரதிஷ்டவசமாக தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானது என்றும் அதே நிலையில் தேர் சிறிது தூரம் இழுத்து வந்திருந்து அப்போது தேர் சாய்ந்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஆகி இருக்கும் என்றும் பொதுமக்கள் கூறினர்.

மேலும் இந்த விபத்தை ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு  இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவம் ஏற்படாமல் இருக்க அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்து அறநிலையத்துறையும் மாவட்ட நிர்வாகமும் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சம்பவம் குறித்து இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா கூறுகையில், “அனைத்து வித அனுமதியும் பெற்று இந்த தேரோட்டமானது தொடங்கியதாகவும் பொதுப்பணித்துறை சான்றளித்த பின்னரே தேரோட்டம் நடைபெற்றதாகவும் இரண்டு ஆண்டு காலமாக தேரோட்டம் நடைபெறாததால் அதிகமாக கூடியிருந்த மக்கள் தேரை வேகமாக இழுத்ததால் தேர் சாய்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. தேர்முறையாக இல்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டிற்கு விசாரணை செய்து அது போன்று இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரக்கூடிய காலங்களில் இதுபோன்ற நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தேர் சாய்ந்த இடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்ததால் அங்கு குவிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களை கலைந்து போக செல்லி வலியுறுத்தி ‌ தேர் சாய்ந்த இருபுற சாலைகளிலும் பேரிக்காடுகள் வைத்து பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சாய்ந்த தேரில் இருந்த சாமி சிலைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பின்னர் இரண்டு கிரேன் உதவியுடன் நீண்ட நேரம் போராடி சாய்ந்த தேர் நிமிர்க்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பழமை வாய்ந்த கோவிலின் ஆடிப்பூர தேரோட்டத்தில் தேர் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை செய்தியாளர் ர.ரியாஸ்

First published:

Tags: Pudukkottai, Temple