புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் சம்பவம் நடைபெற்று 40 நாட்கள் ஆகியும் இது நாள் வரை சிபிசிஐடி போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்காதது வருத்தமளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம நீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று 40 நாட்கள் ஆகியும் இது நாள் வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அதன் காரணமாகத்தான் தமிழ்நாடு அரசு சிபிசிஐடி போலீஸ் இடம் இந்த வழக்கை ஒப்படைத்தது. இருப்பினும் சிபிசிஐடி போலீஸ் சார் குற்றவாளியை கண்டுபிடிக்காதது வருத்தமளிக்கிறது. கூடிய விரைவில் குற்றவாளிகளை யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு இந்த விஷயத்தில் சிறப்பாக தான் செயல்படுகிறது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை குற்றவாளிகள் இதுநாள் வரை கைது செய்யப்படவில்லை. பல நேரங்களில் அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காததன் காரணமாகவே இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் இந்த வழக்கில் தனி கவனம் செலுத்தி விரைந்து குற்றவாளியை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சரை பொறுத்தவரை அவர் ஜாதி பாகுபாடு பார்ப்பது கிடையாது. அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்துதான் இந்த ஆட்சியை நடத்தி வருகிறார்.
கூட்டணி என்பது வேறு. இது போன்ற சம்பவங்களில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் விமர்சனம் செய்திருப்போம். பல நேரங்களில் அரசுக்கு எதிராக நாங்கள் பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளோம். வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரை அதிமுக, பாஜக குரல் எழுப்பாதது ஏன்?.
சீமான் என்னை பற்றி அரசியல் காரணங்களுக்காக விமர்சனம் செய்து வருகிறார். நான் ஒரு ஜாதிக்கு மட்டும் சப்போர்ட் செய்வது கிடையாது. நான் ஜாதிய தலைவராக இல்லாமல் அனைத்து சமூக மக்களின் பிரச்சனைகளுக்காகவும் களத்தில் நின்று போராடி வருகிறேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெருவது உறுதி. இந்த தேர்தலில் அதிமுகவின் நிலை பரிதாபமாக உள்ளது. தற்போது அதிமுகவில் இருக்கும் பிளவை பயன்படுத்தி பாஜக தமிழ்நாட்டில் கால் ஊன்ற பார்க்கிறது. அதிமுக தொண்டர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது வாக்கு வங்கிக்கு வலு சேர்க்கும் என்று நான் கருதவில்லை. அதே வேளையில் பாஜவிற்கு எதிராக ஓரணியில் சேர்ந்திருப்பதை நான் வரவேற்கிறேன்” என கூறினார்.
செய்தியாளர் : ரியாஸ் - புதுக்கோட்டை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Erode Bypoll, Erode East Constituency, Pudukkottai, Thirumavalavan