புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மீமிசல் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி உமா. இவர்களது மகன் காத்த முத்து (எ) மணிகண்டன். இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணி செய்து வந்துள்ளார். பின்னர் கடந்த 2 ஆண்டு காலமாக ஹாங்காங்கில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது காத்தமுத்து (எ) மணிகண்டனுக்கும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த அலார்கான் - செரில் தம்பதியரின் மகள் சென் (எ) செல்சீக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இந்த காதல் குறித்து மணிகண்டனும் அதேபோல் செல்சீயும் அவரவர் வீட்டில் தெரிவித்துள்ளனர்.
அப்போது முதற்கட்டமாக இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் முதலில் தயக்கம் காட்டிய நிலையில் பின்னர் காதலுக்கு மரியாதை கொடுத்து தங்களது பிள்ளைகளின் காதலை உணர்ந்து இருவரின் காதலுக்கும் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படியும் கலாச்சாரத்தின் முறைப்படியும் மணிகண்டன் - செல்சீ திருமணம் நடைபெற வேண்டும் என்று மணிகண்டன் பெற்றோர் கேட்டுக் கொண்டதன்படி செல்சீயின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் உறவினர்கள் புடை சூழ மணிகண்டன் செல்சீ தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தாலி கட்டி திருமணம் முடிவடைந்த நிலையில் பின்னர் விருந்தோம்பல் நிகழ்ச்சி திருவப்பூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்துகொண்டு மணிகண்டனையும், செல்சீயையும் மனமாற வாழ்த்தினர்.
இதுகுறித்து புதுமணமக்கள் மணிகண்டனும், செல்சீயும் கூறுகையில், “ஹாங்காங்கில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்தபோது எங்களுக்கு காதல் மலர்ந்தது. 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். முதலாவதாக மணிகண்டன் அவரது காதலை அவரது வீட்டில் தெரிவித்தபோது அவரது பெற்றோர் தயக்கம் காட்டினர்.
பின்னர் அந்த காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் பின்னர் செல்சீயும் அவரது தாயாரிடம் தெரிவித்து காதலுக்கு சம்மதம் பெற்றோம். தற்போது இருவீட்டாரும் இணைந்து திருமணம் செய்து வைத்தது இருவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் செல்சீக்கு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தனக்கு இது புது அனுபவத்தை தந்துள்ளது” என அவர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
இதுகுறித்து மணிகண்டனின் தந்தை கூறுகையில், “எனக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்த நிலையில் 2வது மகன் காத்தமுத்து (எ) மணிகண்டன். சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிந்த பின்னர் கடந்த 2 ஆண்டு காலமாக ஹாங்காங்கில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்து வந்தான்.
அப்போது ஹாங்கில் உள்ள பெண்ணை காதலிப்பதாக தெரிவித்தான். மேலும் அவனுக்கு நாங்கள் பெண் பார்த்து வந்தோம். அப்போது அவன் காதலிப்பதாகவும் அங்கேயே பதிவு திருமணம் செய்து கொண்டு பின்னர் பெண்ணை அழைத்து வந்து தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தான்.
அதனால் கடல் தாண்டி மொழிகளைக் கடந்து வந்த காதலுக்கு மரியாதை கொடுத்து தனது மகனின் காதலையும், மனதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக காதலுக்கு சம்மதம் தெரிவித்து தற்போது இருவருக்கும் தமிழர்களின் முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
செய்தியாளர் : ரியாஸ் - புதுக்கோட்டை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Love, Lovers, Pudukkottai, Tamil News