புதுச்சேரி தர்மாபுரியை சேர்ந்தவர் முனியம்மா (எ) பிரபாவதி. இவர் புதுச்சேரி குருமாம்பட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இந்த தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 17 ஆண்டுகளாக சீட்டு நடத்தி வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த பொருளை வழங்கி நம்பிக்கை நட்சத்திரமாக பிரபாவதி திகழ்ந்து வந்துள்ளார்.
மேலும் தனது மகன் காவல்துறையில் பணிபுரிந்து வருவதாகவும், தன்னை நம்பி பணம் கட்டுங்கள் என்றும் சக ஊழியர்களிடம் ஆசை வார்த்தை கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை சீட்டில் சேர்த்துள்ளார். மேலும் தள்ளுபடி விலையில் தங்கம், கொல்லிமலையிருந்து மளிகை பொருள், சில்வர், பித்தளை பாத்திரங்கள் என 2 விதமாக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து சீட்டு நடத்தியுள்ளார்.
இதை நம்பிய பெண் ஊழியர்கள் தனது உறவுக்காரர்கள், தெரிந்தவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என அனைவரையும் சீட்டில் சேர்த்துள்ளனர். ஆயிரம் ரூபாய் பணம் கட்டுபவர்களுக்கு நகை 2 கிராம், வெள்ளி 25 கிராம், பித்தளை தவளை, மணிலா எண்னெய் 15 லிட்டர், 25 கிலோ அரிசி மற்றும் இனிப்பு, காரம் பட்டாசு பாக்ஸ், என கவர்ச்சிகரமாக கூறி ஆயிரம் பேரை சீட்டில் சேர்த்தார்.
இவர்கள் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2022ம் ஆண்டு அக்டோபர் வரை பணம் கட்ட வேண்டும் என்று கூறி சீட்டு பதிந்துள்ளனர். ஆனால் தீபாவளி வருவதற்கு முன்பே ஆகஸ்ட் மாதமே பிரபாவதி 80 லட்சம் ரூபாயை சுருட்டிக்கொண்டு தலை மறைவாகிவிட்டார்.
இந்நிலையில், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் பிரபாவதி மகன் ராஜ பிரபு தனது அம்மாவை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் சீட்டுக்கட்டிய பெண்களுக்கு தெரியவரவே அவரது வீட்டை முற்றுகையிட்டு கட்டிய பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அதற்கு எந்தவித பதிலும் இல்லாததால் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு 5 பேருக்கு மட்டும் காவலர்கள் அனுமதி அளித்தனர். இதையடுத்து, அவர்கள் ஐ.ஜி சந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஐ.ஜி.சந்திரன் இதன் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், “சீட்டு கட்டியவர்களுக்கு நியாயமாக பொருளை கொடுத்தார் என்ற நம்பிக்கையில் அவரிடம் தீபாவளி சீட்டு பணம் கட்டினோம். ஆனால் தீபாவளி வருவதற்கு 2 மாதத்திற்கு முன்பே 80 லட்சம் ரூபாய் பணத்துடன் அவர் மாயமாகிவிட்டார். எனவே அவரை கண்டுபிடித்து எங்களுக்கு பணத்தை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry