புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “நாக்பூரில் ஒரு விழாவில் பேசிய பிரதமர், குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருபவர்களால் தான் நாட்டில் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கூறியதை வரவேற்கிறேன்.
அதை பிரதமர் கடைபிடிக்கிறாரா? கோவா மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாதபோது காங்கிரஸ் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வந்தது. மணிப்பூரில் ராணுவத்தை வைத்து காங்கிரஸ் உறுப்பினர்களை கடத்தி ஆட்சிக்கு வந்தது. பல மாநிலங்களில் இதே நிலைதான்.
தமிழகத்தை ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அரசு சட்டம் கொண்டு வந்தாலும் ஆளுநர் அனுமதி வழங்கவில்லை. ஆன்லைன் சூதாட்டம் பலரது உயிரை பறிக்கிறது. புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை இல்லை. உடனடியாக அவசர சட்டத்தை கொண்டு வந்து ரத்து செய்ய வேண்டும்.
புதுச்சேரியில் ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களே ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துகின்றனர். அதனால் அரசு தயக்கம் காட்டுகிறது. புதுச்சேரியில் மின்துறை நஷ்டத்தில் இயங்கவில்லை. ஆனால் தவறாக நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தனியார் மயமாக்க அரசு முயற்சிக்கிறது.
சண்டிகார் தவிர வேறு எங்கும் மின் துறை தனியார் மயமாகவில்லை. இதனால் தேவைப்பட்டால் தனியார் மயத்தை எதிர்த்து பொது நல வழக்கு தொடர்வோம்” என்றார்.
மேலும் புதுச்சேரியில் திமுக ஆட்சி அமையும் என தமிழக முதல்வர் கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு, “திமுக ஆட்சி என கட்சியினரை உற்சாகப்படுத்த கூறியுள்ளார். தமிழக முதல்வர் கூறியதில் தவறு இல்லை. அரவிந்தர் கெஜ்ரிவால் கூட குஜராத் தேர்தலில் சென்று ஆம் ஆத்மி ஆட்சி வரும் என கூறினார்.
அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கட்சி ஆட்சிக்கு வரும் என கூறுவது வழக்கம். காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடரும் என்று கூறினார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சி போல புதுச்சேரியிலும் திமுக தோல்வி பெறும் என கூறுகிறீர்களா? என கேள்விக்கு பதிலளித்த அவர், “தவறு. பிரதமர் கூட இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமையும் என கூறினார். அவரவர் கட்சியை உற்சாகபடுத்த பேசுவது தலைவர்கள் செய்வதுதான்” என நாராயணசாமி பதில் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “ஊழல்களை ஆதாரத்தோடு காங்கிரஸ் தொடர்ந்து வெளிப்படுத்தும். முதல் அமைச்சர் அலுவலகத்திலுள்ள புரோக்கர்கள் தான் கோப்புகளை முதல் அமைச்சரிடம் எடுத்து சென்று ஒப்புதல் பெறுகிறார்கள். அதில் ஒரு புரோக்கர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.
தொழிற்சாலை நடத்தி வருகிறார். அது தொடர்பான ஆதாரத்தை திரட்டி வெளியிடுவோம். அமைச்சர்களின் பினாமி பட்டியலையும் சேகரித்து வருகிறோம். விரைவில் அந்த பட்டியலையும் வெளியிடுவோம். ஆளும் அரசு தொடர்ந்து மதுபானக்கடைகளுக்கு ரெஸ்டோ பார் என்ற பெயரில் அனுமதி தருகிறது.
பள்ளி, கல்லூரி, குடியிருப்பு ஆகிய இடங்களில் இந்த பார்கள் அமைக்கப்படுகிறது. இதற்கு எதிராக மக்களும் போராடுகிறார்கள். இதுதொடர்பாக பொதுநல வழக்கு தொடரவேண்டும்” என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Congress, DMK, Narayana Swamy, Puducherry