தெலங்கானா மக்களுக்காக என் மீது காரி துப்பினாலும் துடைத்து கொண்டு போவேன் என்பது போல செயல்படுகிறேன் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிராஜ் நிவாசில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, புதுச்சேரி குடியரசு தினவிழாவில் பங்கேற்க தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கோரினார். புதுச்சேரி குடியரசு தினவிழாவில் பங்கேற்று 8.06க்கு கிளம்பினேன். 9.06க்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் வானிலை அனுமதியில்லாததால் வானில் சுற்றிக்கொண்டிருந்தோம். தாமதத்திற்கு நான் காரணமில்லை என்றாலும் கூட, என்னை மன்னிக்க வேண்டுகிறேன் என தெரிவித்தார்.
தெலங்கானாவில் சட்டமீறல், விதி மீறல், அரசியலமைப்பு சட்டமீறல் நடந்துள்ளது. இதை கோர்ட் கடுமையாக கண்டித்துள்ளது. மத்திய அரசுக்கு நடந்த சம்பவம் குறித்து விளக்கியுள்ளேன். கோர்ட் உத்தரவை தொடர்ந்து மைதானத்தில் நடத்தியிருக்க வேண்டும். இந்த முறையும் கொரோனாவை காரணம் கூறியுள்ளனர். நகைப்பு என்னவென்றால் கொரோனாவை காரணம் காட்டி குடியரசு தின விழாவை தெலங்கானா அரசு நடத்தவில்லை. ஆனால் 5 லட்சம் பேரை கொண்டு கூட்டம் நடத்தினார்கள். அப்போது கொரோனா பரவல் இல்லையா என கேள்வி எழுப்பினார்.
தெலங்கானாவில் விதிமீறல் உள்ளது. அதை முரசொலி சந்தோஷமாக எழுதுகிறது. அவர்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை மீறுகின்றனர். அரசியலமைப்பு சட்டப்படி குடியரசு தினம் கொண்டாடப்பட வேண்டும். அதை கொண்டாடுவதை கொண்டாடினால் என்ன சொல்வது? எல்லா அதிகாரமும் எங்களிடம் உள்ளது. அதிகாரத்தை பயன்படுத்தினால் கவர்னர் அதிகாரத்தை பயன்படுத்துகிறார் என சொல்கிறீர்கள். பயன்படுத்தாவிட்டால் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என்கிறீர்கள். நேர்மையாக, மக்களுக்கு என்ன பலன் தருகிறதோ? அதை செய்வோம் என தெரிவித்தார்.
தெலுங்கானா மக்கள் என் மீது அதிக நேசம் வைத்துள்ளனர். ஒரு அரசு வேண்டுமென்றே விதிமீறல்களை சொல்கிறது. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என நினைத்து கவர்னரை எதிர்க்கிறார். கவர்னர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள்? என கூறுபவர்கள், முதலமைச்சர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? என கேட்கட்டும். தெலுங்கானா அரசு நடந்துகொண்ட விதம் குறித்து மத்திய அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளோம்.
மத்திய அரசுக்கு மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும். அதன்படி அறிக்கை அனுப்பியுள்ளோம். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நேரடியாக கவர்னர் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர்கள் தூண்டுதலின்பேரில் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்கக்கூடாது என நினைக்கிறேன். என் மீது காரி துப்பினாலும் துடைத்துக்கொண்டு போய்விடுவோம் என்ற வசனம் போல செயல்படுகிறேன் என ஆவேசமாக தெரிவித்தார்.
இதன் பிறகு புதுச்சேரி அரசின் நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு அரசின் கொள்கை முடிவுகள் குறித்து முதலமைச்சர், அமைச்சர்களிடம் கேளுங்கள். நான் அரசுக்கு பாலமாக செயல்படுகிறேன். மக்கள் நலனுக்காக நான் சொல்வதை வேறுமாதிரி எடுத்துக்கொள்கிறீர்கள். இனி முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சரிடம் கேளுங்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன், செயல்படுகிறேன். சாதாரண ஆள், கோப்புகளுக்கு மட்டுமே கையெழுத்து போடுகிறேன். இதற்கு மேல் பதில்லை என கூறி செய்தியாளர் சந்திப்பை பாதியில் முடித்து கொண்டு கையெடுத்து கும்பிட்டு தமிழிசை புறப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dr tamilisai soundararajan, Puducherry, Tamilisai, Tamilisai Soundararajan