புதுச்சேரி செல்லும் பேருந்துகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக மேல்வலைமாதேவி, கீழ்வளைமாதேவி, கரிவேட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி 2000 முதல் 2006ம் ஆண்டும் வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது இதே கிராமத்தில் கூடுதலாக இழப்பீடு வழங்கி மேலும் சில நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. முன்னதாக நிலம் கொடுத்த மக்கள், தங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கீழ்வளைமாதேவி பகுதியில் 2006ல் கையகப்படுத்திய நிலத்தை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டது. எதிர்ப்பை மீறி நடைபெற்ற இந்த பணியால், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில், வளையமாதேவி பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்களை கட்டுப்பாட்டில் எடுக்க என்.எல்.சி நிறுவனம் துடிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள அவர், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை (11ம் தேதி) சனிக்கிழமை கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி பேருந்து உரிமையாளர் சங்க துணைத் தலைவர் கோவிந்தராஜ் கூறுகையில், “ கடலூரில் நாளை முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் பேருந்துகள் நாளை புதுச்சேரி முள்ளோடை வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry