கொரோனாவிற்கு பிறகு மண்பாண்டங்களில் சமைத்து சாப்பிட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மண்பாண்ட பொருட்கள் விற்பனை அமோகமாக இருப்பதாக மண்பாண்ட கலைஞர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும் அரசு மண்பாண்ட தொழிலை பாதுகாக்கும் வகையில் மண் எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதுச்சேரி அருகே பொங்கல் பானை தயாரிக்கும் பணியிலும், செய்த பொங்கல் பானைகள் உள்ளிட்ட மண்பாண்டங்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியிலும் மண்பாண்ட கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி அருகே தென்னல் நகர் பகுதியில் குறைந்த அளவிலான மண்பாண்டக் கலைஞர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்கள் பொங்கல் பண்டிகைக்காக மண்பானை தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவது வழக்கம். கடந்த காலங்களில் 10 படி அரிசி பொங்கலிடும் பெரிய பானைகள் செய்ததாகவும், தற்போது ஒரு கால் கிலோமுதல் மூன்று கிலோ வரையிலான சிறிய பானைகளை செய்வதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
கொரோனாவினால் வருமானத்தை இழந்து கிடந்தோம். கொரோனாவிற்குபிறகு மக்கள் மத்தியில் மண் பாண்டங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதாகவும், இதன் காரணமாக மண் பண்டங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கும் மண்பாண்ட கலைஞர்கள், தற்போது பொங்கல் பானைகள், மண்சட்டி, தண்ணீர் குடம், கிச்சன் செட் மற்றும் வீடுகளில் வைக்கப்படும் டெரகோட்டா பொம்மைகள் உள்ளிட்டவை செய்து புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்தனர்.
அரசு மண்பாண்ட தொழிலை பாதுகாக்க மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். பொதுமக்கள் மண்பாண்ட தொழிலை பாதுகாக்கவும், மண்பாண்ட கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மண்பாண்டங்களை வாங்கி ஆதரவளிக்க வேண்டுமென மண்பாண்ட கலைஞர் சண்முகம் தெரிவித்தார்.
எம் பி ஏ படித்து முடித்த பட்டதாரி மண்பாண்டம் செய்யும் தொழிலில் தனது மூதாதையர்கள் செய்து வந்ததை தொடர்ந்து தற்போது செய்து வருகிறார். தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தற்போது மண்பாண்டங்கள் தவிர்த்து டெரகோட்டா பொம்மைகள், கிச்சன் செட், உள்ளிட்டவை பொதுமக்கள் மத்தியில் வாங்கும் எண்ணத்தை தூண்டும் வகையில் அழகாகவும், நேர்த்தியாகவும் செய்து வருவதாகவும், கொரோனா காலத்திற்குப் பிறகு மக்கள் மத்தியில் மண்பாண்டங்களை பயன்படுத்த வேண்டும், மண்பாண்டங்களில் சமைத்து உணவருந்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது.
இதனால் எங்களது உற்பத்தி பொருட்களான மண்பாண்டங்கள் தற்போது விற்பனை அமோகமாக உள்ளதாகவும் இதனால் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal festival, Puducherry