வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி பெண்ணிடம் 36 லட்சம் மோசடி செய்து ஏமாற்றிய நைஜீரிய இளைஞரை பெங்களூருவில் வைத்து புதுச்சேரி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் வேலைவாய்ப்பு செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் அமெரிக்காவில் குடியுரிமையுடன் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தரப்படும் என கூறப்பட்டிருந்தது. குறுஞ்செய்தியில் உள்ள மெயில் முகவரியில் தொடர்பு கொண்டு பேசிய பெண்ணிடம், விசா, விமான டிக்கெட் செலவு, இமிகிரேஷன் என பல்வேறு பொய்களை சொல்லி லட்சக்கணக்கில் பணத்தை கறந்துள்ளார் மர்மநபர் ஒருவர்.
இப்படியாக 36 லட்சம் வரை அந்த பெண் மர்மநபரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் தான் ஏமாற்றப்படுவதாக உணர்ந்த பட்டதாரி பெண் கடந்த 2ம் தேதி புதுச்சேரி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபரிடம் சம்பந்தப்பட்ட பெண்ணை வைத்து தொடர்ந்து பேச வைத்துள்ளனர்.
செல்போனை ட்ராக் செய்த போலீசார் பெங்களூருவில் பதுங்கியிருந்த மர்மநபரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரை புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் பிடிபட்டவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 28 வயதான ரூபன் குட் நியூஸ் எனத் தெரியவந்தது.
2014 ஆம் ஆண்டு ஸ்டுடென்ட் விசா மூலம் இந்தியா வந்துள்ளார்
அவரிடம் இருந்து லேப்டாப், செல்போன்கள், கிரெடிட் கார்டுகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 35 ஆயிரம் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அவரிடம் ஏமாந்த நபர்கள் குறித்தும் அவருக்கு உதவி செய்த நபர்கள் குறித்தும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
நைஜீரிய இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
குறுஞ்செய்தி அழைப்பு மூலம் வேலைவாய்ப்பு தேடும் நபர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர். சரியான காரணமில்லாமல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளக்கூடாது என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்தியாளர்: இளவமுதன், புதுச்சேரி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheating, Crime News, Puducherry