திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் ஒன்று வந்தவாசி. வந்தவாசி என்றாலே நினைவுக்கு வருவது கோரப்பாய் நெசவு. வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பாண்டுரங்கன் கோயில். இந்தப்பகுதியைப் பொறுத்தவரையில் விவசாயமே பிரதான தொழிலாக பார்க்கப்படுகிறது. இப்பகுதி மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருப்பதால் வந்தவாசி தொகுதி விவசாய வாழ்வாதாரம் என்று கூறலாம்.
மாவட்டத்தின் பெயர் : திருவண்ணாமலை
சட்டமன்ற தொகுதியின் பெயர் : வந்தவாசி
வாக்காளர்களின் எண்ணிக்கை
ஆண் வாக்காளர்கள் : 1,16,309 பேர்
பெண் வாக்காளர்கள் : 1,18,730 பேர்
மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5 பேர்
மொத்தம் 2,35,044 வாக்காளர்கள் உள்ளனர்.
வந்தவாசி தொகுதி தி.மு.க-வின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. இதுவரை வந்தவாசி தொகுதியில் நடைபெற்ற 11 சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க வேட்பாளர்கள் 5 முறையும், அதிமுக வேட்பாளர்கள் 4 முறையும், காங்கிரஸ், பா.ம.க கட்சியினர் தலா 1 முறை இத்தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ பாண்டுரங்கன் கோயில்
1977- ஆம் வருடம் முதல் வந்தவாசி தொகுதியில் வெற்றிப் பெற்றவர்கள் விபரம்:
1977 - முனுசாமி (அதிமுக )
1980 - குப்புசாமி (அதிமுக)
1984 - அறுமுகம் (காங்கிரஸ்)
1989 - தன்ராஜ் (திமுக)
1991 - செ. கு. தமிழரசன் (அதிமுக)
1996 - பால ஆனந்தன் (திமுக)
2001 - முருகவேல் ராஜன் (பா.ம.க)
2006 - எஸ்.பி. ஜெயராமன் (திமுக)
2009 - கமலக்கண்ணன் (திமுக)
2011 - குணசீலன் (அதிமுக)
2016 - அம்பேத்குமார் (திமுக)
2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அம்பேத்குமார் 18,068 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வந்தவாசி தி.மு.கவின் கோட்டையாக தற்போது வரை இருந்து வருகிறது.
வந்தவாசி தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்னைகள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் தொடங்கப்பட்ட 15 கோடி ரூபாய் செலவிலான மூன்றாவது குடிநீர் திட்டம் கிடப்பில் உள்ளது.
450 கோடி ரூபாய் செலவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திண்டிவனம் - நகரி ரயில் பாதை பணிகள் முடிக்கப்படாமல் பாதியில் கிடப்பில் உள்ளது.

வந்தவாசி பேருந்து நிலையம்
மக்களின் கோரிக்கைகள்
வந்தவாசி என்றாலே நினைவுக்கு வருவது கோரைப்பாய் இங்கு சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கோரை பாய் நெசவு தொழில் செய்து வருகின்றனர். இலவச மின்சாரம், கோரை பாய் நெசவு தொழிலாளர்கள் தனி நல வாரியம், கோரைப்பாய் நெசவாளர்களுக்கு தனி தொழிற்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கோரைபாய் நெசவாளர்கள் முன் வைக்கின்றனர்.

கோரைப்பாய்
வந்தவாசி நகரில் உள்ள சுகநதி ஆற்றை சீரமைத்து இரு புறமும் கரைகளை பலப்படுத்தி படகு போக்குவரத்து அமைப்பது என்பது வந்தவாசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்
மக்களின் எதிர்பார்ப்புகள்
கிராமப்புறங்களில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை செய்யும் 100 நாள் வேலையை 200 நாள்களாக உயர்த்த வேண்டும்.
செய்தியாளர் - மோகன், வந்தவாசி.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்