வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே இன்று புதிதாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ரயில் நிலையத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ``இன்று பிரதமரால் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்தவை. பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வந்ததால் முதல்வர் பிரதமரை தனியாக சந்தித்த போது மாநிலத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்து மட்டுமே பேசப்பட்டது. கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் பேச வில்லை” என்றார்.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர் ஜெயக்குமார்!
தொடர்ந்து பேசிய அவர், ``வட சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியதால் வட சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும். வரும் 2025-ம் ஆண்டுக்குள் சென்னை போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகரமாக மாற்றி அமைக்கப்படும்" என்றும் தெரிவித்தார்
டிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளதாகவும் அதிமுகவினரை எதிரியாக நினைக்கும் அவர் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.