ஈழப்போரை தாங்கள்தான் நடத்தியதுபோன்ற பிம்பத்தை சில தலைவர்கள் உருவாக்குகிறார்கள் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் விமர்சித்துள்ளார்.
ராமநாத மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 112 வ து ஜெயந்தி விழாவும் 57வது குருபூஜை விழாவும் அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ளதால் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த திருவாடனை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் சென்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று சீமான் கூறியதாக அறிந்தேன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அது ஒரு துரதிஷ்டமாக நடந்தது என்றுதான் கூறியிருக்கிறார்.
தமிழர்களின் உயிர்களை காவு வாங்குவதற்கு காரணமாக இருந்த காரணத்திற்காக ராஜிவ் காந்தியை கொலை செய்தது தாங்கள்தான் என்று அதற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.
மேலும் பேசிய அவர், “போர்க்களத்தில் நிற்காதவர்கள், அங்கு என்ன நடந்தது என்று கூட தெரியாதவர்கள், உடன் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்ட ஒரே ஒரு அடையாளத்தை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக தாங்கள்தான் முன்னின்று நடத்தியது போல தோற்றத்தை உருவாக்க தமிழகத்திலேயே சில தலைவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் .
நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது நல்லதல்ல . தியாகம் செய்து உயிர்நீத்த தியாகத்தை தன்னுடைய சுயநலத்துக்கு பயன்படுத்துவது என்பது அது மிகவும் கேவலமானது , கீழ்த்தரமானது.” என்றார்.
தாங்கள் தான் கொன்றோம் போன்ற கருத்துகளை சீமான் பகிர்வது நியாயம் இல்லை என்பது தன்னுடைய நிலைப்பாடு என கருணாஸ் தெரிவித்தார்.
Video:
Published by:Yuvaraj V
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.