தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவு தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
திருச்சியில் ஓட்டுக்கு பணம் தரவில்லை எனக் கூறி நரிக்குறவர் சமூக மக்கள் வாக்குச்சாவடி முன்பாக வாக்குவாதம் செய்த சம்பவம் நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவராயநேரி பகுதியில் அதிகமான நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட பணம் எங்களுக்கு வந்துசேரவில்லை எனக் கூறி 100க்கும் அதிகமான மக்கள் வாக்குச்சாவடியின் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தலுக்காக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கொடுக்கப்பட்ட பணம் தங்களுக்கு எதுவுமே வந்து சேரவில்லை. நாங்கள் வசிக்கும் பகுதியில் எந்த அடிப்படை வசதிகளையும் எந்த கட்சியும் செய்து தரவில்லை. அரசியல் கட்சியினர் ஓட்டுக்காக கொடுத்த பணத்தை உள்ளூரில் உள்ள தலைவர்கள் முறையாக வழங்காமல் எடுத்துக் கொண்டனர்” என்று கூறி நூற்றுக்கணக்கான நரிக்குறவர் சமூகத்தினர் வாக்குச்சாவடி முன்பாக கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.