`உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் தனது பிரச்சார பயணத்தின் நான்காம் நாளாக கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டியில் மக்களின் குறைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொண்டு விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஆதரித்து, துரோகம் செய்தாக வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
`உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் தனது பிரச்சார பயணத்தின் நான்காம் நாளாக கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டியில் மக்களின் குறைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தது திமுக ஆட்சியில்தான் என குறிப்பிட்டார். அதிமுக விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருவதாக சாடினார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் கே.பி. முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அதிமுக பொதுக்குழுவில் முனுசாமியை, 30 சதவீத முனுசாமி என அதிமுகவினரே குறிப்பிட்டதால், ஜெயலலிதா அவரது பதவியை பறித்ததாகவும் கூறினார். அதிமுவை உடைக்க முனுசாமி முயற்சி செய்து வருவதாக மக்கள் பேசுவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிட்டது போல் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றும், அதற்காக போராட வேண்டியிருந்தால், போராட்டங்களை நடத்தி உறுதியாக கல்விக்கடன் ரத்து செய்யப்படும் எனவும் கூறினார்.
1976ம் ஆண்டு இந்திராகாந்தி பிறப்பித்த அவசர நிலை பிரகடனத்திற்கு எதிராக திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டதாகவும், பிப்ரவரி ஒன்றாம் தேதி தான் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்ட ஸ்டாலின் அந்த நாள் தன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் எனவும் தெரிவித்தார்.
முன்பெல்லாம் கைது செய்தால் சிறையில் அடைப்பார்கள், ஆனால் தற்போது கைது செய்தால் மண்டபத்தில் அடைக்கிறார்கள் எனக் குறிப்பிட்ட ஸ்டாலின், கைது செய்தால் சிறையில் அடைக்க அஞ்சும் அரசு எடப்பாடி பழனிசாமி அரசு என குறிப்பிட்டார்.
பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று 50 ஆண்டுகாலம் மக்களுக்காக உழைத்த ஸ்டாலின்தான் உரிமையோடு 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் வாக்கு சேகரிப்பதாக கூறினார்.