பெரம்பலூர் அருகே கோயிலில் இருந்த மைக் செட் உள்ளிட்ட பொருட்களை திருடிய இருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து கட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் அருகே உள்ள நாவலூர் கிராமத்தில் மாரியம்மன் மற்றும் விநாயகர் கோயில்கள் உள்ளது. இந்த மாரியம்மன் கோயிலில் பொங்கல் விளையாட்டு விழா நடத்துவதற்காக மைக்செட் அமைக்கப்பட்டுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த பாலு என்பவருக்கு சொந்தமான இந்த மெக் செட், ஆம்பில்பயர் உள்ளிட்ட மின் சாதனங்கள் மாட்டுப்பொங்கலை அடுத்த காணும் பொங்கல் அன்று இரவு காணாமல் போனது.
இது குறித்து பெரம்பலூர் காவல் நிலைய நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகார் நிலுவையில் உள்ள நிலையில், கிராம பொதுமக்களும் விசாரணை செய்து வந்துள்ளனர். அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, அதே ஊரைச் சேர்ந்த செந்தில் மகன் சுரேஷ்(24) மற்றும் களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராரஜ் மகன் சந்துரு(25) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்ததில், அவர்கள் இருவரும் கோயிலில் இருந்த மைக் செட் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை திருடி சென்று துறையூரில் விற்று ஜாலியாக செலவு செய்தது தெரியவந்தது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் உள்ள கோயில்களின் கலசங்கள், குத்துவிளக்குகள், கோயில் மணிகளையும் அவர்கள் திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் கோயிலில் உள்ள தூண்களில் கட்டி வைத்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை மீட்க முயற்சித்த போது, பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களையும் அழைத்துச் சென்று உடனே விடுவித்து விடுவீர்கள் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தர மாட்டீர்கள். தங்கள் கிராம கோயில்களில் திருடிய பொருட்களை மீட்டு தர வேண்டும் என்று கூறி பொதுமக்கள் அவர்களை ஒப்படைக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து பொதுமக்களிடத்தில் நீண்ட நேரம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்து குற்றவாளிகள் இருவரையும் மீட்டு பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து குற்றவாளிகள் மீட்கப்பட்ட சந்துரு சுரேஷ் ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: ஆர்.ராஜவேல், பெரம்பலூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Perambalur, Tamil News, Theft