பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியர் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் பள்ளிக்கு சென்று வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 6 முதல் 10ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் செல்வகுமார், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகளும், கிராம மக்களும் அவரை கண்டித்து எச்சரித்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் மீது பாலியல் புகார் ஆங்கில ஆசிரியர் செல்வகுமார் மீது எழுந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக மாணவிகளை வெளியில் அழைத்துச் சென்றும், பெரம்பலூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றும் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
மேலும் பள்ளி வகுப்பறையில் பாடம் எடுக்கும் போதும் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக மாணவிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மாணவிகளின் புகார் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து கல்வித்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு வந்திருந்த ஆசிரியர் செல்வகுமார் மதியத்திற்கு மேல் யாரிடமும் சொல்லாமல் தலைமறைவாகிவிட்டார். இதனால் கோபம் அடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு மற்ற ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர் செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.விசாரணையில் உண்மை இருப்பது தெரியவந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மதன்மை கல்வி அலுவலர் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் அவர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆசிரியர் செல்வகுமார் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: ஆர்.ராஜவேல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Perambalur, POCSO case