பெரம்பலூரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் மண் சரிவு... இருவர் உயிரிழப்பு
பெரம்பலூரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் மண் சரிவு... இருவர் உயிரிழப்பு
பெரம்பலூரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் மண் சரிவு
பெரம்பலூர் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் மண் சரிவு ஏற்பட்டு இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கல் காரியை தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த கல்குவாரியில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஏராளமான லாரிகளில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கிரஷர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
கவுள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் உரிமம் எடுத்து நடத்தி வரும் இந்த கல்குவாரியில் அவரது சகோதரர் சுப்பிரமணி என்பவரும், செந்தில்குமார் என்ற தொழிலாளியும் இன்று காலை வேலை செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென சுமார் 50 அடிக்கு மேல் உயரத்தில் இருந்து மண் சரிவு ஏற்பட்டதில், இடிபாடிகளில் சிக்கி சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த இரண்டு தொழிலாளர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், உரிமம் பெற்று செயல்படும் இந்த கல்குவாரியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். வேறு யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை. இதனைத் தொடர்ந்து கல்குவாரி தற்காலிகமாக மூடப்படுகிறது. இந்த கல்குவாரியில் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஆய்வுக்குப் பிறகு அவர்களின் அறிக்கையை பெற்ற பின் கல்குவாரியை மீண்டும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.