NaMo செயலி மூலம், மாணவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முயற்சிப்பேன் என பிரதமர்
மோடி தெரிவித்துள்ளார்.
பரிக்ஷா பே சார்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். இந்த நிகழ்வுக்காக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம்.
தேர்வுகள் குறித்தும் அதுசம்பந்தமான உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடலாம். கடந்த, 2021ம் ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்நிலையில், 5வது ஆண்டாக இன்று டெல்லி டல்கோத்ரா விளையாட்டு அரங்கில், மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, அவர் உரையாற்றியதாவது, இது எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி. ஆனால் கொரோனா காரணமாக உங்களைப் போன்ற நண்பர்களை இடையில் சந்திக்க முடியாமல் போனது. இன்றைய நிகழ்ச்சி எனக்கு ஒரு தனி மகிழ்ச்சியை தருகிறது, ஏனென்றால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
பண்டிகைகளுக்கு இடையில் தேர்வுகள் நடைபெறுகிறது. இதனால், பண்டிகைகளை கண்டு ரசிக்க முடியாத நிலை மாணவர்கள் மத்தியில் உள்ளது. ஆனால், தேர்வையே திருவிழாவாக மாற்றினால், அதில் பல வண்ணங்கள் உங்களால் நிரப்பப்படும் என்றார்.
தொடர்ந்து, மாணவர்களுடன் உரையாடும் போது பிரதமர் நரேந்திர மோடி, உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாமல் போகலாம், ஆனால் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க பல்வேறு சேனல்களை உருவாக்குகிறோம். "வீடியோ, ஆடியோ, எழுதப்பட்ட தொலைநகல் அல்லது நமோ செயலி மூலம், அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முயற்சிப்பேன், இதனால் எந்த மாணவரும் நீண்ட நாட்கள் சந்தேகத்துடன் இருக்கக்கூடாது" என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.