காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை பயன்படுத்தும் விதமாக காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்துக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், காவிவிரி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த கர்நாடகம் ஒருபோதும் அனுமதிக்காது என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக நீரை வழங்கவும் சாத்தியமில்லை எனவும், காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி தமிழக அரசு நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனிடையே, தமிழக அரசு செயல்படுத்த இருக்கும் ஆறுகள் இணப்புத் திட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரச்னை எழுப்பவதோடு, திட்டத்தை கைவிட தமிழக அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும், கர்நாடக அரசுக்கு மாநில எதிர்க்கட்சித் தலைவா் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.